தினமும் பால் குடிப்பது உடலுக்கு நல்லதுதானா..? இத முதல்ல படிங்க..!


புத்தகங்கள், டிவி என எதைப் பார்த்தாலும் டயட், இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்று போட்டு குழப்பிவிடுகிறார்கள். கடைசியில் நாம் என்ன தான் சாப்பிடுவது?

இதில் பால் சாப்பிடுவது உடலுக்குக் கேடு என்றொரு வதந்தி வேறு.

காலை எழுந்த உடன் குடிக்கிற காபி, டீயில் தொடங்கி, இரவு உணவு வரை உள்ளே இறங்கும் ஒவ்வொரு கவள உணவைப் பற்றியும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள்… குழப்பங்கள்…

பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு. புரதம், கால்சியம், வைட்டமின் பி (குறிப்பாக ரிபோஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துகளும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் பால் அவசியம். குழந்தைகளுக்கு அடிப்படை உணவான பால், வயதானவர்களுக்கு சப்ளிமென்ட் உணவு.

தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு மில்க் என பாலை 4 வகைகளாகப் பிரிக்கலாம். தாய்ப்பாலில் ‘கேசின்’எனப்படுகிற புரதச்சத்து குறைவு. அது பசும்பாலில் அதிகம். எருமைப்பாலில் கொழுப்புச்சத்து அதிகம். ஸ்கிம்டு மில்க்கில் புரதச்சத்து அதிகம். கொழுப்புச்சத்து கம்மி. ஸ்கிம்டு மில்க்தான் எல்லோருக்கும் உகந்தது.


சைவ உணவைப் பின்பற்றுகிறவர்களுக்கு பால்தான் பேலன்ஸ்டு உணவு. ஒரு நாளைக்கு ஒருவருக்கு சராசரியாக 250 மி.லி. பால் அவசியம் தேவை. பெரியவர் களானால் 150 மி.லி. பள்ளிக்கூட வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் போன்றோருக்கு இந்த அளவு 500 மி.லி. முதல் 1000 மி.லி. வரை வேறுபடும்.

‘பெண்கள் பால் குடிக்கக் கூடாது, பால் குடித்தால் உடல் பருக்கும், ஹார்ட் அட்டாக் வரும்’ என்றெல்லாம் ஆளாளுக்கு ஆயிரம் சொல்வதைக் கேட்கிறோம். பாதகமில்லாத உணவு பால். பிரச்னை பாலில் அல்ல. அதிலுள்ள கொழுப்பில்தான். கொழுப்பு நீக்கிய பால் எல்லோருக்கும் உகந்தது. இதய நோய் உள்ளவர்களும் பால் குடிக்கலாம்.

பாலில் இருந்து பெறப்படுகிற தயிர், மோர், வெண்ணெய், பனீர், சீஸ் போன்றவற்றில் தயிரும் மோரும் சிறந்தவை. பாலின் புளித்த வடிவமான தயிரில் உள்ள பாக்டீரியாக்களும் லாக்டிக் அமிலமும் செரிமானத்துக்குப் பெரிதும் உதவக் கூடியவை. சிலவகை உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் எடுப்பதால் வயிற்று எரிச்சல், வயிற்றில் புண் போன்றவை ஏற்படலாம்.


அதைக் குறைக்க மறுபடி மருத்துவர்கள் வேறு மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். மருந்துகளின் பக்க விளைவுகளையும் வீரியத்தையும் குறைப்பதில் தயிருக்கு நிகர் இல்லை. தயிர் என்றால் புளிப்பில்லாதது. கொழுப்பு நீக்கப்பட்டது மட்டுமே அனுமதி. தயிரா, மோரா எனக் கேட்டால் மோர்தான் சிறந்தது. பேதியாகும் போது பால் எடுக்கக் கூடாது. அந்த நேரத்தில் மோர்தான் நல்லது.

பல வீடுகளில் உபயோகிக்கிற நீல நிற ஆவின் பால் பாக்கெட்டில் இருப்பது வெறும் 3.5 சதவிகிதக் கொழுப்பு. இப்போது 2 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு கொண்ட பிங்க் நிற ஆவின் பால் கூடக் கிடைக்கிறது. டயட் செய்கிறவர்களுக்கு அது பெஸ்ட். ஆரஞ்சு, பச்சை நிற பாக்கெட்டெல்லாம் அதிகக் கொழுப்பு கொண்டவை என்பதால், அரிதாக பால் குடிப்பவர்களுக்கும், சராசரியை விட எடை குறைவாக உள்ளவர்களுக்கும் மட்டும் ஓ.கே.

கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவே இருந்தாலும், அதைக் காய்ச்சி, முதலில் அறை வெப்பநிலைக்கு ஆற வைக்க வேண்டும். மேலே படிகிற ஆடையை நீக்கி விட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். அந்த பால் ஏட்டைத் தனியே சேகரித்து, வாரம் ஒரு முறை வெண்ணெயாக்கி, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!