தினமும் யோகா செய்வதால் தீரும் பிரச்சனைகள்!

மனிதர்களின் உடலும், உள்ளமும் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும் சித்தர்கள் அளித்த இக்கலையை பயில்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.


கடுமையான வேலை செய்பவர்கள், கணினி சம்பந்தமான வேலை செய்பவர்கள் தினமும் யோகாசனங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். வேலையில் உள்ள மனஅழுத்ததால் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வடிகாலாக யோகாசன கலை இருக்கிறது.

தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராகி, இதயம் பலம் பெறுகிறது.மேலும் நல்ல சீரான சுவாசம் கிடைப்பதோடு இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது. ஆயுளையும் நீட்டிக்கிறது.

யோகாசனங்கள் செய்யும் போது நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் நம்முடைய உடலானது நல்ல அழகான வடிவத்தை பெறுகிறது. உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளை சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது.

தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நம்முடைய மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியடைகிறது. அதிகப்படியான வேலைபளு மற்றும் பிற காரணங்களால் பலரும் மனஅமைதி, சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது.

யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுக்கின்றோம். இதனால் நம்முடைய இரத்த ஓட்டம் சீரடைகிறது. இப்படி ரத்த ஓட்டம் சீரடைவதால் உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுத்து, ரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவை சிறிது சிறிதாக நீங்குகிறது.

தினமும் யோகா செய்பவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பலம் பெறுகின்றன. இதனால் நமது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. தினமும் யோகாசனங்கள் செய்பவர்களுக்கு மூளை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கும் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும் பலருக்கும் வயிற்றில் தொந்தி அல்லது தொப்பை ஏற்படுகிறது. யோகானசனங்களில் நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் சுலபத்தில் தொந்தியை குறைக்க முடியும்.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், உடலுக்கு சற்று அழுத்தம் தரும் வகையிலான பணிகளில் ஈடுபடுபவர்கள் யோகாசனங்கள் செய்வது நல்லது. இதனால் தசை தளர்வடைவதை தவிர்த்து இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்ய முடிகிறது. இதனால் உடலில் ஏற்படும் வலிகளை போக்கும் சிறந்த வலி நிவாரணியாக யோகாசன கலை செயல்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!