ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் தொல்லை, தாயுடன் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் சுந்தர் நகரை சேர்ந்தவர் சிற்றரசு (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ராஜலட்சுமி(70). இந்த தம்பதியின் மகன் அருள்வேல்(36), கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவியை சேர்ந்த சேகர் மகள் திவ்யா(30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளான்.

அருள்வேலும், திவ்யாவும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அருள்வேல் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பி கேட்டு அருள்வேலுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அருள்வேல் வேலையை விட்டு விட்டு, பண்ருட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். திவ்யா தனது மகனுடன் சென்னையிலேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பண்ருட்டிக்கும் வந்து கடனை திருப்பி கேட்டு அருள்வேலை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அருள்வேல் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாக தனது தாய் ராஜலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ராஜலட்சுமி, நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அருள்வேல் நேற்று கடையில் இருந்து விஷத்தை வாங்கி வந்துள்ளார். பின்னர் சிற்றரசு வீட்டில் இருந்து வெளியே சென்றதும், அருள்வேலும், ராஜலட்சுமியும் வீட்டில் வைத்து விஷத்தை குடித்துள்ளனர்.

இதற்கிடையே வீட்டுக்கு திரும்பி வந்த சிற்றரசு, ராஜலட்சுமி வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அருகில் அருள்வேல், மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே சிற்றரசு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருள்வேலை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் தாயுடன் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.