பசுவிற்கும், வளர்த்த பெண்ணுக்கும் இடையேயான பாசப்போராட்டம் -நெகிழ்ச்சி சம்பவம்

தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆர்எம்எஸ் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவர் இரண்டு பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இவரது கணவர் புகழேந்தி பால் வியாபாரம் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு காலில் ஆணி ஏறியதால் நடக்க முடியாமல் இருக்கிறார்.

முத்து வளர்த்த இரண்டு பசு மாடுகளின் பாலிலேயே குடும்பத்தை ஓட்டி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் அவரது இரண்டு பசுக்களில் ஒன்று மேய்ந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பால் எடுக்க வந்த வேன் ஒன்று சாலையின் ஓரம் இருந்த மாட்டின் காலை இடித்து தள்ளி நிற்காமல் அதிவேகமாக சென்றுவிட்டது.

இதில் மாட்டிற்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு, மாட்டின் முட்டிக்கும், பாதத்திற்கும் இடையே இருந்த எலும்பு முறிந்து தொங்கிக் கொண்டிருந்தது. ரத்தம் நிற்காமல் கொட்ட ஆரம்பித்தது. வலி தாங்காத அந்த பசு ‘அம்மா அம்மா’என கத்திக் கொண்டே இருந்தது.

இதனை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள், ஆம்புலன்சுக்கு போன் செய்துவிட்டு, நடந்ததை அப்படியே முத்துலெட்சுமியிடம் கூறினர். முத்து லெட்சுமி உடன் பிறந்த சகோதரிக்கு இப்படி ஆகியிருந்தால் எப்படி பதறி இருப்பாரோ அதேபோல் பதறி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்.

மேலும் பசுவின் கழுத்தை இறுக்க பிடித்துக் கொண்டு, ‘அடியே! நீ 4 மாதம் செனையா இருக்கிற. இந்த நேரத்துல இப்படி ஆயிடுச்சே. உன்னால தாங்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்டி. உன்ன இப்படி பார்க்க முடியலையே’ என புலம்பி தவித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

உடனே அந்த பசு, கத்துவதை நிறுத்திவிட்டு அமைதியாக முத்துலெட்சுமியின் கண்ணீரை தன் நாக்கினால் துடைத்துவிட்டு ஆறுதல் கூறுவதைப்போல் உடன் அமர்ந்துக் கொண்டது. இந்த காட்சி அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. பின்னர் மாட்டினை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.