நமது உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறும் பொருட்டு நாம் சத்தான உணவு வகைகளை தெரிவு செய்து உண்கின்றோம். அதிலும் முளைகட்டிய தானியங்கள் எமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் முதன்மை பெறுகின்றது.
அதுசரி, முளைகட்டிய தானியங்கள் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தானியங்களை சிலமணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் அதன் வேர்கள் முளைக்கத் தோன்றும். இவ்வாறு வேர் முளைக்க ஆரம்பித்த தானியங்கள் அல்லது விதைகளே முளைகட்டிய தானியங்கள் அல்லது விதைகள் என அழைக்கப்படும்.
எவ்வகையான தானியங்கள் அல்லது விதைகளை முளைக்க வைக்கலாம்?
01. போஞ்சி வகைகள்
02. தானியங்கள்
03. பச்சைத் தாவரங்கள்
04. விதைகள்
முளைகட்டிய தாவரங்களை பொதுவாக பச்சையாகவே உண்ணலாம் அல்லது அரை அவியல் செய்தும் உண்ணலாம். இவ்வாறு முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் பொதிந்து காணப்படும். அதிலுள்ள விட்டமின்கள் ஒவ்வொரு தானியத்திற்கும் அல்லது தாவரத்திற்கு ஏற்ப வேறுபட்டு காணப்படும்.
எனினும், எந்தவொரு முளைகட்டிய தானியத்திலும் பொதுவாக புரோட்டீன், போலேட், மக்னீசியம், பொஸ்பரஸ், மங்கனீஸ் மற்றும் விட்டமின்சி, கே என்பன காணப்படும். அத்துடன், இந்த முளைகட்டிய தானியங்களில் அமினோஅமிலங்களும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முளைகட்டிய தானியங்களை உட்கொள்வாதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
01. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்
02.உணவு சமிபாடடையும் செயற்பாடு துரிதமாகவும் சிறந்த முறையிலும் மேற்கொள்ளப்படும்
03. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய பொருளாக இவை விளங்குகின்றது.
முளைகட்டிய தானியங்கள் மற்றும் தாவரங்களை உண்பதால் நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
01.சமைக்கப்படாத முளைகட்டிய தாவரங்கள் மற்றும் தானியங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பக்டீரியாக்கள் உள்ளன. இந்த பக்டீரியாக்கள் காரணமாக நாம் உட்கொள்ளும் உணவுகள் நச்சுத் தன்மையடையும் வாய்ப்பு உண்டு. வயிற்றுப்போக்கு, வாந்திபேதி என்பன இதன் அறிகுறிகளாகும்.
நாம் சில உத்திகளைக் கையாள்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். அவை என்ன என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.
01.குளிரூட்டியில் ஆரோக்கியமான முறையில் வைக்கப்பட்ட முளைகட்டிய தாவரங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
02.அதிக மணம் வீசும் மற்றும் வழுவழுப்பான தன்மை கொண்ட முளைகட்டிய பயிர்களை கொள்வனவு செய்யக் கூடாது.
03.முளைகட்டிய பயிர்களை எப்போதும் குளிரூட்டியிலேயே வைத்திருக்க வேண்டும்.
04.முளைகட்டிய பயிர்களை கையாள்வதற்கு முன்பாக கைகளை நன்கு சுத்தம் செய்தல் அவசியம்.
எது எவ்வாறாயினும், முளைகட்டிய தானியங்களில் சத்துக்கள் பொதிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே தகுந்த முறையில் இதனைக் கையாண்டு நன்மை பெறுவோம். – © Tamilvoice.com | All Rights Reserved
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!