புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் இருமல்!

புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகுபவர்கள் நுரையீரல் சார்ந்த நோய் பாதிப்புகளால் வேதனையை அனுபவிக்கிறார்கள். அதில் இருந்து மீள முடியாத நிலை தொடரும்போது நுரையீரல் புற்றுநோய் உருவாகலாம். இருமல், ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் ஆரம்பகால பிரச்சினைகளாகும்.

அதன் முதல் அறிகுறி இருமலாகும். சாதாரண இருமலுக்கும், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு ஏற்படும் இருமலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண இருமல் சில நாட்களில் சீராகிவிடும். ஆனால் புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் இருமல் அந்த பழக்கத்தை கைவிடும் வரை தீராது. மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் வேறு வகையில் நிகோடினையோ, புகையிலை பொருட்களையோ நுகர்ந்தால் அதுவும் இருமலை தூண்டக்கூடும். புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட அனைவருக்கும் வெவ்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். இறுதியில் சளியில் ரத்தமும் வெளிப்படும்.

அதற்கான சிகிச்சை பெறாவிட்டால் இருமல் தீவிரமடைய தொடங்கிவிடும். அதன் தாக்கமாக நெஞ்சுவலி, தொண்டை வலி, சுவாச கோளாறு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மற்ற நேரங்களை விட காலை வேளையில் இருமல் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

அப்போது உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிக்க வேண்டும். தேனுடன் வெதுவெதுப்பான நீரை பருகி வரலாம். காலை வேளையில் சுவாச பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருமல் குறைவதற்கு நீராவியை பயன்படுத்தலாம். நிரந்தரமாக நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதுதான் சிறந்தது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!