மதியம் உணவிற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது!

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் மதியம் சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா பழமோ, கொய்யா ஜூஸோ பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


ரத்த அழுத்த பாதிப்பு நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருந்தால் தமனி பாதிப்பு, பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சராசரியாக ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். அது 180/90 என்ற நிலைக்கு மேலே சென்றால் உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு கடும் பாதிப்புகளை சந்திக்க நேரும். உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு ஆளாகுபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வருவது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும், இதயநோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

பொட்டாசியம் குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள் உருவாகுவதற்கான அபாயத்தை அதிகரிக்க கூடும். மற்ற உணவு வகைகளை விட கொய்யா பழத்தில் பொட்டாசியத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்க வேளாண் துறையின் கருத்துப்படி 100 கிராம் கொய்யா பழத்தில் 417 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கரோடினாய்டுகள், பாலிபினால்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை இதயத்தை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும்.

சுகாதார வல்லுனர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு கொய்யாவை பரிந்துரைப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட வைட்டமின் சி சத்து நான்கு மடங்கு அதிகம் இருக்கிறது. அது இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும். பக்கவாதம், மாரடைப்பு அபாயத்தை குறைப்பதற்கு வைட்டமின் சி பக்கபலமாக இருப்பதாக சில ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி ரத்த நாள சுவர்களின் உள்புற ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் மதியம் சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா பழமோ, கொய்யா ஜூஸோ பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!