சித்த மருத்துவம் மூல நோயைக் குணமாக்க சொன்ன அபான முத்திரை பற்றி தெரியுமா..?


அந்த காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உடலைச் சுத்தம் செய்ய நோன்பு இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேதிமருந்து எடுத்துக்கொள்வது என சில நல்ல பழக்கங்களை கடைபிடித்தனர்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்ட காலத்திலேயே உடலை சுத்தம் செய்ய குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை தேவையாக இருந்தது. ஆனால் இன்றைய ஃபாஸ்ட் புட் கலாசாரத்தில் உடலின் நச்சுக்களை அகற்ற எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்வதே இல்லை. மருந்துகளை சாப்பிட்டு உடலை சுத்தம் செய்வது போலவே முத்திரை செய்தும் உடலை சுத்தம் செய்துகொள்ள முடியும்.

உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கிய காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ்நோக்கி தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.

எப்படி செய்வது?

கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இரு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

பலன்கள்: வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கி தள்ளப்படுவதால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனம் தெளிவடையும். பள்ளி செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர காலையில் மலம் கழிக்கும் பிரச்னை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து வாயுவால் ஏற்படும் வயிற்றுவலி நீங்கும்.


மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும்வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள் ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்சனைகள் வராது.

முத்திரையை தொடர்ந்து செய்துவர வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாக சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தண்ணீர், இளநீர், கரும்புச்சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில் 20 நிமிடங்கள் செய்யலாம்.

கட்டளைகள்: நாற்காலியில் அமர்ந்து தரையில் கால்களை ஊன்றியபடியோ தரை விரிப்பில் சப்பளமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால் படுத்துக்கொண்டு செய்யக்கூடாது. காலை, மாலை இருவேளையும் 20-40 நிமிடங்கள் வரை செய்யலாம். சாப்பிட்ட ஒருமணி நேரத்திற்கு பிறகுதான் செய்யவேண்டும். வாந்தி, பேதி பிரச்னை இருக்கும்போது செய்யக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதை தவிர்க்கவும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!