கொரோனாவை எலுமிச்சைசாறு அழிக்குமா?

உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது ஒருவித ஹோமியோபதி மருந்தை உபயோகிக்கலாம் என்றும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் உலா வந்தது.


கொரோனா வைரஸ் பரவு வதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் அதனை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கனவே கொரோனா பற்றிய பீதியில் இருப்பவர்கள் எளிய முறையில் கூறப்பட்டிருக்கும் டிப்ஸ்களை பின்பற்றுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் ‘இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்குக்குள் விட்டால் கொரோனா வைரஸ் அழிந்து விடும். உடலில் ஆக்சிஜன் அளவும் அதிகரித்துவிடும்’ என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

‘லெமன் தெரபி’ என்ற பெயரில் அந்த வீடியோவில் பேசும் நபர், ‘‘எலுமிச்சை சிகிச்சை மேற்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்தும் காப்பாற்றும். இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கிற்குள் விட்டால் போதும். அப்படி செய்தால் கண், காது, மூக்கு, இதயம் உள்ளிட முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் ஐந்து நிமிடங்களில் சுத்திகரிக்கப்படும். சளி, இருமல் தொல்லைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த எலுமிச்சை சிகிச்சை நிவாரணம் அளிக்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.

உண்மையில் எலுமிச்சை சாற்றை மூக்கினுள் விட்டால் கொரோனா வைரஸ் அழியாது. அது ஒரு கட்டுக்கதை என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் உண்மை தன்மை பற்றி பலரும் பதிவிட்டிருக்கிறார்கள்.

பி.ஐ.பி எனப்படும் பத்திரிகை தகவல் பணியகம் என்னும் அமைப்பும், ‘‘அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள டிப்ஸ் நம்பகத்தன்மையற்றது. மூக்கில் எலுமிச்சை சாறு விடுவதன் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை’’ என்று கூறியுள்ளது.

உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது ஒருவித ஹோமியோபதி மருந்தை உபயோகிக்கலாம் என்றும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் உலா வந்தது. அதனை ஆயுஷ் அமைச்சகம் நிராகரித்தது. ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் சுய மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக செயல்படக்கூடாது. நோயின் தன்மை அறிந்து எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!