பக்தர்களிடம் புனித உதி வடிவத்தில் பாபா வாழ்ந்து வருகிறார்!

பாபாவின் பக்தர்களுக்கு வரம் போன்று கிடைத்துள்ளது புனித உதி. ஆம், பாபா பக்தர்களை உதியினால் ஆசிர்வதிக்கிறார். பாபாவின் மறு உருவமே உதி. தனது குழந்தைகளின் நல் வாழ்வுக்காக புனித உதி வடிவத்தில் பாபா வாழ்ந்து வருகிறார்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ளவை அனைத்துமே சாம்பலைப் போன்று நிலையற்றது என்று தனது உதியின் மூலம் விளக்குகிறார் பாபா. பஞ்சபூதங்களினால் உருவான நமது உடல் இறுதியில் உதியாக மாறிவிடுகிறது. அதனால் இந்த உலகில் உதி மட்டுமே நிரந்தரம் என்பதை விளக்குகிறார் பாபா.

பக்தர்களுக்கு உதி என்ற விபூதியை வழங்கியிருப்பது பாபாவின் அருட்கொடை என்றுதான் சொல்லவேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதியை தண்ணீரில் கலந்துகொடுக்க வேண்டும். உதியை பாபாவின் உடலாகவே எண்ணி பருக வேண்டும். அதன்பிறகு பாபா உடலுக்குள் தஞ்சம் கொள்கிறார். பாபா இருக்கும் உடலில் எந்த நோயும் இருப்பதற்கு அஞ்சும்.

அதனால் நோயின்றி வாழ விரும்புபவர்கள், தினமும் பாபாவின் உதியை நெற்றியில் பூசிக்கொள்வது நல்லது. நெற்றியில் பூசிக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் உதியை நீரில் கரைத்து அருந்துவதும் ஏற்கத்தக்கதே. காலையும் இரவும் உதியை அருந்தினால் உடல் நலப் பாதுகாப்பை பாபா ஏற்றுக்கொள்வார். மருத்துவம் சாதிக்க முடியாததை நம்பிக்கையும் பிரார்த்தனையும் சாதித்துவிடும். அதனால் பாபாவின் மீதும் உதியின் மீதும் நம்பிக்கை வையுங்கள்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதி மருந்தாக செயல்படும். பசியினால் துடிப்பவருக்கு உணவாக மாறுகிறது. மனதில் அமைதி இன்றி தவிப்பவர்களுக்கு நிம்மதியாக உருமாறும். அச்சத்தில் இருப்பவர்களுக்கு தைரியம் கொடுக்கும். அதனால் தினப்பொழுதை பாபாவின் உதியுடன் தொடங்கி, உதியுடன் முடித்தால் துன்பம் எட்டிப் பாராது.- Source: timestamil * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!