தாங்க முடியாத வாய் துர்நாற்றமா? தீர்க்கும் வழிமுறைகள்!

நம் பற்களின் இடுக்கில் உணவுத்துகள்கள் தங்கியிருக்கும்போது, பாக்டீரியாக்கள் உருவாகி பெருகி அதனால் நாற்றத்தை உண்டாக்குகின்றன.


இரவில்தான் பாக்டீரியாக்கள் நம் பற்களில் பெருகுகின்றன. நம் பற்களின் இடுக்கில் உணவுத்துகள்கள் தங்கியிருக்கும்போது, பாக்டீரியாக்கள் உருவாகி பெருகி அதனால் நாற்றத்தை உண்டாக்குகின்றன. இதனால்தான் தூங்கி எழுந்த பின் நாற்றம் ஏற்படுகிறது. பூண்டு வெங்காயம் போன்றவற்றை இரவில் சாப்பிட்டாலும் அவைகளினால் அதிக நாற்றம் ஏற்படும். நாம் பல் விளக்கியதும் நாற்றம் போய் விடும். ஆனால் நாள் முழுவதும் துர்நாற்றம் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

உடலில் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வாயில் நாற்றம் வரும். உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளால், அல்லது பல் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகள் இருந்தால், அல்லது சரியாக பராமரிப்பு இல்லாமல் இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.

பற்களில் பிரச்சனை இருந்தாலும் இல்லாவிட்டாலும், 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பற்களை சுத்தம் செய்து கொள்வது ஈறுகளுக்கு புத்துணர்ச்சி தரும். மேலும் இதனால் பற்களில் சிதைவு, சொத்தை இருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள முடியும்.

ஏனோதானோ என்று பல் விளக்குவதனால் உணவுத் துணுக்குகள் சரிவர வெளியேறாமல், அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடும். அழையா விருந்தாளிகளான பேக்டிரியாக்களை வரவேற்கும். அதன் பின் நாளடைவில் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். எனவே தினமும் பொறுமையாய் அரை நிமிடம் பற்களை நன்றாக விளக்கிவிடுங்கள். முக்கியமாக இரவில் பல் விளக்கினால், கிருமிகள் வாயில் தங்காது.

பற்களை எவ்வளவு சுத்தம் செய்கிறோமோ அவ்வளவு நாவினையும் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நாவிலுள்ள மிகச் சிறிய துவாரங்களிலும் அழுக்கு சேர்ந்திருக்கும். அது கிருமிகளை ஏற்படுத்தி வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக அமையும். எனவே பல் விளக்கும் போது நாவினையும் சுத்தம் செய்வது மிக அவசியம்.

புதினா கலந்த பேஸ்ட் உபயோகிக்கலாம். அதே போல் தினமும் உணவு அருந்தியபின் காலையிலும் இரவிலும் க்ரீன் டீ குடித்தால் அவை பற்களின் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கிறது. க்ரீன் டீ ஒரு கிருமி நாசினியாகும். தினமும் சாப்பிட்டதும் , டீ குடிக்கும் போது பற்களில் கிருமிகள் உருவாகாமல் உதவுகிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கார்போஹைட்ரேட் சத்து குறைவான உணவுகளை உண்டால் துர்நாற்றம் உண்டாவதை தவிர்க்கலாம்.

நம் எச்சிலில் சுரக்கும் ஒரு என்சைம் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது. ஆகவே வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் போதிய இடைவெளியில் அடிக்கடி நீர் குடித்துக் கொண்டிருந்தால் அந்த என்சைம் தூண்டப்பட்டு, கிருமிகளை வெளியேற்றுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும். இவை அனைத்தும் செய்தும் துர்நாற்றம் போகவில்லையென்றால் உடலில் வேறு பிரச்சனைகளும் இருக்கலாம். ஆகவே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது மிக அவசியம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!