தனியார் பேருந்து மோதியதில் தம்பதி துடிதுடித்து சாவு – ஆத்திரத்தில் பஸ்சைக் கொளுத்திய உறவினர்கள் !!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி மடத்துதோட்டம் பகுதியை சேர்ந்தவர் துர்க்கையப்பன் (வயது 37). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (30). அருகே உள்ள ராமபட்டினம்புதூரில் துர்க்கையப்பனின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இதையடுத்து துர்க்கையப்பன், தனது மனைவி மற்றும் மாமியார் விருப்பாட்சியை சேர்ந்த அங்காத்தாள் (50) ஆகியோருடன் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மடத்துதோட்டத்தில் இருந்து ராமபட்டினம்புதூர் நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.

பழனி-திண்டுக்கல் சாலையில் சிந்தலவாடம்பட்டி அருகே சென்றபோது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி வந்த தனியார் பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் துர்க்கையப்பன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த துர்க்கையப்பன், விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அங்காத்தாள் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் பஸ் சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதையடுத்து பஸ்சில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். இதற்கிடையே பஸ் டிரைவரான திண்டுக்கல் அழகுபட்டியை சேர்ந்த ராஜா (35), கண்டக்டரான கன்னிவாடியை சேர்ந்த திருப்பதி (35) ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் துர்க்கையப்பனின் உறவினர்கள் சிந்தலவாடம்பட்டிக்கு திரண்டு வந்தனர். துர்க்கையப்பன், விஜயலட்சுமி பலியானதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பஸ்சுக்கு தீ வைத்தனர். இதனால் பஸ் கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த அங்காத்தாளை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவ இடத்துக்கு பழனி, ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள் வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.

இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்ததும் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், பழனி துணை சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பலியான துர்க்கையப்பன், விஜயலட்சுமி ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் ராஜா, கண்டக்டர் திருப்பதி ஆகியோர் மீதும், தனியார் பஸ் எரிக்கப்பட்டது தொடர்பாக பலியான துர்க்கையப்பனின் உறவினர்கள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.