தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் பாலூர் குடியானத்தெருவை சேர்ந்தவர் நாகப்பன். இவர் கடந்த 20 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு பாஸ்கர் (42), சுந்தரமூர்த்தி, அசோக் என்ற 3 மகன்களும் , 3 மகள்களும் உள்ளனர்.
இதில் 2-வது சுந்தரமூர்த்தி 10 மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பாஸ்கர் மது போதையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த அவரது தம்பி அசோக்கிடம் போதையில் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து பாஸ்கர் பேசிக்கொண்டே இருந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த அசோக், அண்ணன் பாஸ்கரை தாக்கினார்.
இதனால் பதிலுக்கு பாஸ்கரும் கைகளால் தாக்கினார். ஒரு கட்டத்தில் தம்பி அசோக்கை மூங்கில் கம்பை கொண்டு பாஸ்கர் அடித்தார்.
இதில் கடும் ஆத்திரம் அடைந்த அசோக், வீட்டில் கிடந்த இரும்பு கடப்பாரையை கொண்டு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்திருந்த பாஸ்கரின் தலையில் அடித்தார். இதில் பாஸ்கர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தம்பி அசோக்கை போலீசார் கைது விசாரித்து வருகிறார்கள்.
அண்ணனை உடன் பிறந்த தம்பியே கடப்பாரையால் அடித்துக்கொன்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. – Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.