தினமும் கம்ப்யூட்டரே கதியென்று இருப்பவரா..? அப்போ இத முதல்ல படிங்க..!!


எல்லாமே கணினிமயமாகிவிட்ட உலகில், எல்லோருமே கம்யூட்டரை மிக அதிகமாகப் பயன்படுத்துகிறோம். சிலருக்கு முழுநேரப் பணியும் கம்யூட்டரிலேயே தான் இருக்கும். அதனால் நாளின் மிக அதிகமான நேரங்கள் அதிலேயே செலவிட வேண்டியிருப்பதால் பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகும்.

அதில் மிக முக்கியமான ஒன்றுதான் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்பதுதான்.

தினமும் அதிகநேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்தக்கூடிய 85 சதவீதம் பேருக்கு பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கம்ப்யூட்டரால் ஏற்படும் பார்வைத்திறன் பாதிப்புக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். கணினி யுகத்தில் மனிதன் சந்திக்கும் பிரச்சினை இது. சரி, இந்த ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’பற்றியும், அந்தப் பாதிப்பைத் தவிர்ப்பது பற்றியும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமின் முதல்நிலை அறிகுறி, கண்களில் வலி ஏற்படுவதாகும். பின்னர், லேசாக பார்வை மங்குவது, கண்கள் உலர்வது, தலைவலி போன்றவை எட்டிப் பார்க்கும். நமக்கு ஏற்படும் கழுத்துவலிக்கும், முதுகுவலிக்கும், கணினியின் முன் நீண்டநேரம் அமர்ந்து கண்களைப் பயன்படுத்துவதற்கும் தொடர்பு இருக்கிறது.


கம்ப்யூட்டர் பயன்பாடு, பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான காரணம், நாம் சாதாரணமாகப் பார்க்கும்போது அடிக்கடி கண் சிமிட்டுவோம். அது கண்ணின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. ஆனால் கம்ப்யூட்டர் திரையை உற்று நோக்கியபடி இருக்கும்போது கண் சிமிட்டுவது இயல்பாகவே குறைந்துவிடுகிறது.

நாம் சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16 முறை கண் சிமிட்டுகிறோம் என்றால், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறையே சிமிட்டுகிறோம். இதனால், கண்கள் உலர்ந்து போதல், கண்களில் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பிரச்சினை வராமல் தடுக்க முதலில் கம்ப்யூட்டர் திரையை சற்று கீழ்நோக்கித் தாழ்வாக வைக்க வேண்டும். கம்ப்யூட்டர் திரையின் நடுப்பகுதி, நம் கண்களின் நேர் பார்வையில் இருந்து சற்று கீழாக இருக்க வேண்டும். நேருக்குநேர் கண்களில் படக் கூடாது.

கம்ப்யூட்டர் உள்ள இடங்கள் பொதுவாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ஏ.சி. அறையில் காற்றில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில், கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது கண்களைச் சிமிட்டுவது சில சமயங்களில் சிரமமாகிவிடும். அப்போது சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகளைச் சுழற்ற வேண்டும்.


கம்ப்யூட்டர் திரை வெளிப்படுத்தும் ஒளியைக் கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை அணிவது நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களும் இதைப் பயன்படுத்த வேண்டும்.

சாதாரணமாக, 40 வயதுக்குமேல் வெள்ளெழுத்து என்று கூறப்படும் குறைபாடு வரக்கூடும். அவர்கள் அதற்காக அணியும் கண்ணாடி லென்ஸ், கணினித் திரை வெளிப்படுத்தும் ஒளியைக் கட்டுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

கணினித் திரை தட்டையாக இருப்பது நல்லது. மானிட்டரின் வெண் திரையில் கருப்பு நிற எழுத்து, உருவங்கள் கண் பார்வைக்கு நல்லது. சாதாரணமாக உங்களால் பார்க்க முடியும் எழுத்தை விட 3 மடங்கு பெரிய எழுத்தைத்தான் கம்ப்யூட்டர் அமைத்துக்கொள்ள வேண்டும்.


கணினித் திரையின் பிரகாசம் கண்களை உறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மானிட்டரில் இருந்து கண்கள் குறைந்தபட்சம் 20 அங்குல தூரம் தாண்டி இருக்க வேண்டும்.

கண் இமைகளை தேவையான அளவுக்கு சிமிட்டாத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடுகின்றன. அதனால் கண்களில் வலி ஏற்படும்.

அவ்வப்போது திரையிலிருந்து பார்வையை சிறிதுநேரம் விலக்கி வைக்க வேண்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!