மீண்டும் உலகின் முதல் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்!

டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார்.

இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மே 31-ம் தேதி அர்னால்டு LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

பிரெஞ்சு வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே கடும் போட்டி நிலவி வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார்.

லூயிஸ் விட்டன், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் அர்னால்ட். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன.

ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார்.

இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!