பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்து ரூ. 41 லட்சம் வென்ற பயனாளர்…!

ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்த உடன் எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன்… ஆனால், அது முடக்கப்பட்டுள்ளது.

தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய் இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022-ம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக பேஸ்புக் தெரிவித்தது.

எனது கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை அது கொடுத்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது பேஸ்புக் விதிகளை மீறும் செயல் என்பதால் கணக்கு முடக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், நான் விதியை மீறும் வகையில் எந்த பதிவுகளையும் பார்க்கவில்லை என்று கூறினார்.

மேலும், முடக்கப்பட்ட தனது பேஸ்புக் கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசன், எந்த வித காரணமும் இன்றி தனது கணக்கை முடக்கிய பேஸ்புக் மீது ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் ஜெசனின் கணக்கை முடக்கியதற்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனத்தால் தெரிவிக்கமுடியவில்லை.

இதனை தொடர்ந்து எந்த வித காரணமும் இன்று பயனாளரின் பேஸ்புக் கணக்கை முடக்கியதற்காக சம்பந்தப்பட்ட பயனாளருக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து முடக்கப்பட்ட ஜெசனின் பேஸ்புக் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜெசனுக்கு 50 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அந்த தொகையை பேஸ்புக் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!