இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி: குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்னுடனும், கம்மின்ஸ் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. அதன்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 25 ரன்னிலேயே ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். ஹேண்ட்ஸ்காம்ப் 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த நாதன் லயன் ரன்ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவிற்கு வந்தது. ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. .இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

இந்தியாவை விட ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.