உலகின் முதல் இரு புறமும் மடிக்கக்கூடிய சியோமியின் ஸ்மார்ட்போன்..!


சாம்சங் நிறுவனம் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிடலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏற்கனவே தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது.

இந்நிலையில் சாம்சங் போன்றே சியோமி நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இருவிதங்களிலும் மடிக்கக்கூடியதாக காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று காட்சியளிக்கிறது. இம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இரு புறங்களிலும் மடிக்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் MIUI 10 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கிறது, ஸ்கிரீன் அளவு மாற்றப்படும் போது யு.ஐ. சீராக மாறிக் கொள்கிறது. இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் சில காலம் வரை காத்திருக்க நேரிடும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!