கொசுக்களை ஒழிக்கும் புதிய ரேடார் சாதனத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எங்கு தெரியுமா..?


கொசுக்களால் மனிதர்களுக்கு விதவிதமான நோய்த்தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரப்படி ஆண்டுதோறும், சுமார் 10 லட்சம் பேர் கொசுவால் பரவும் நோய்களால் உயிரிழக்கின்றனர்.

எனவே கொசுவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. நம் நாட்டில் வீடுகளில் கொசுவர்த்தி, கொசு ஒழிப்புத் திரவம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் நீர்த் தேங்கும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் புதிய ரேடார் சாதனம் ஒன்றை சீனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏவுகணையில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது.


பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த ரேடாரின் உதவியோடு, 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களை அறிந்து கொள்ள முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். ரேடாரில் இருந்து அதிவேகமாக மின்காந்த அலைகள் வெளியேறும் வகையில் அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை, அருகில் உள்ள கொசுக்கள் மீது பட்டுத் திரும்புவதன் மூலம் கொசு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்தக் கருவியின் உதவியால் அந்தக் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள கொசுக்களின் பாலினம், அவற்றின் பறக்கும் வேகம் மற்றும் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட கொசு சாப்பிட்டுள்ளதா அல்லது பசியோடு மனிதர்களைக் கடிக்க சுற்றிக் கொண்டிருக்கிறதா என்பது வரை இந்தக் கருவியின் மூலம் கண்டறியப்படும் என கூறப்படுகிறது. அதன்மூலம் கொசுக்களின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

மற்ற நாடுகளில் பறவைகள் மற்றும் பெரிய பூச்சியினங்களின் நகர்வுகளைக் கண்காணிக்க பொதுமக்களுக்கான ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உலகிலேயே முதன்முறையாக கொசுக்களை கண்காணிக்க சீனா ராணுவ தொழில்நுட்பத்துடன் ரேடாரை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!