கன்னியாகுமரி அருகே பயங்கரம் – பிளாஸ்டிக் கவரில் சுற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட இளைஞர்!


கன்னியாகுமரி அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றி தீ வைத்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடி கண்டுகிருசி குளத்தின் கரையருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததை இன்று குளிக்கச்சென்ற சிலர் பார்த்திருக்கிறார்கள். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கன்ன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாத், சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினர். எரிந்த நிலையில் சடலமாக கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்றும், அரை நிர்வாண நிலையில் உடல் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, பின்னர் தீயிட்டு எரிக்கப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத், “உடலில் அதிக காயங்களுடன் உயிரிழந்த அந்த இளைஞர், கேரள பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவரை கொன்று எரித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!