திருமண நாளன்று மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த கொடூர தந்தை -அதிர வைத்த காரணம்..!


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மணப்பெண்ணை அவரது தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

“ கேரள மாநிலம் அரிக்கோட் பகுதியைச் சேர்ந்த அதிரா (வயது-22) என்ற இளம் பெண் ஒருவர் வேற்று சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். ராணுவ வீரான அந்த இளைஞர் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உயிருக்கு உயிராய் காதலித்த இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

தனது காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, தந்தையிடம் அதிரா தெரிவித்துள்ளார். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத அதிராவின் தந்தை அரை மனதுடன் திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். இதையடுத்து, திருமணத்திற்காக தடபுடல் ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இருப்பினும், மகள் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வதை விரும்பாத தந்தை, அதிருப்தியிலேயே இருந்துள்ளார். திருமணத்திற்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில், தனது மகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போது, மணப்பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தந்தை பெற்ற மகள் எனவும் பாராமல் மணப்பெண்ணை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளார்.

இதில், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுயநினைவு இன்றி விழுந்த மணப்பெண் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மணப்பெண்ணின் தந்தையான ராஜன் ( வயது 42) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.-
Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!