மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணப்படுத்தும் அற்புதமான சித்தரத்தை லேகியம்!


நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில், ஒன்றுதான் சித்தரத்தை.அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் எனும் இருமலுக்கு, சித்தரத்தையை தேனில் இழைத்து, நாக்கில் தடவி வருவார்கள். இருமல் உடனடியாக நீங்கிவிடும்.சித்தரத்தை சிறந்த மணமூட்டியாக திகழ்வதால், வாயின் துர்நாற்றம் போக்க மவுத் ஃபிரஷ்னர் ஆகப் பயன்படுகிறது, மூலிகை மருந்துகளில், சேர்க்கப்படுகிறது.

மனிதரின் பல்வேறு வியாதிகளைப்போக்க, நல்ல மருந்தாகத் திகழ்கிறது, பொதுவாக, சிறந்த வலி நிவாரணியாக அறியப்படுகிறது, நாள்பட்ட இருமலுக்கு சிறந்த மருந்து, தொண்டைப்புண், இடுப்பு வலி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலிகள் மற்றும் அல்சர் எனும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மைமிக்கது.குழந்தைகளுக்கு ஏற்படும், மாந்தம், இளைப்பு மற்றும் சளித் தொல்லைகளுக்கும் சித்தரத்தை, சிறந்த தீர்வாக அமையும்.


இடுப்பு வலி போக்கும் சித்தரத்தை நீர் மருந்து :
இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர். அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும், அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில், இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.

ஒவ்வாமை :
சிலருக்கு ஒவ்வாமை அல்லது சுவாச பாதிப்பினால் ஏற்படும் ஜலதோசத்தால், கடுமையான இருமல் ஏற்படும், பேசும்போது இருமல் தொடர்ந்து வந்து, தொண்டையை வற்றச் செய்து, பேச்சைத் தடைசெய்துவிடும்.


இருமலை தணிக்க :
இந்த பாதிப்பை போக்க, உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலாக பல நாட்கள் தொல்லை தந்து வந்த இருமல் யாவும் ஓடிவிடும்.சித்தரத்தை சளியை ஏற்படுத்தும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் வகை பாக்டீரியாக்களை அழித்து ஒழிக்கும் ஆற்றல் மிகுந்து விளங்குவதால்தான், அநேகம் மேலைமருந்துகளில், சித்தரத்தையின் மூலங்கள் சேர்க்கப்படுகின்றன.

மூச்சுத்திணறல் போக்கும் சித்தரத்தை :
சிலருக்கு ஜலதோசத்தினால் மூக்கடைப்பு ஏற்பட்டு, மூக்கின் வழியே மூச்சு விடமுடியாமல், வாய் வழியே மூச்சை விட்டு வருவர், சிலருக்கு தீவிரமான வறட்டு இருமலின்போது, கடுமையான நெஞ்சு வலி தோன்றும். இந்த பாதிப்புகள் யாவும் அகல, சித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல் அல்லது பொடி, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை ஒரே அளவில் எடுத்து, பொடியாக்கி, அதை எடுத்து, அரை தம்ளர் நீரில், தேன் கலந்து பருகி வர, மூக்கடைப்பு சளித் தொல்லை, மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டது, ஜுரம் மற்றும் வறட்டு இருமல் பாதிப்புகள் நீங்கும்.


முட்டி வீக்க வலி மருந்து:
கால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கங்களால் சிலர் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருவார்கள், இந்த பாதிப்பு நீங்க,தேவதாரு பட்டை, சாரணை வேர், சீந்தில் கொடி, நெருஞ்சில் வேர் மற்றும் சித்தரத்தை, இவை அனைத்தையும் நன்கு உலர்த்தி, பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு, அதில் சிறிது எடுத்து, மூன்று தம்ளர் நீரில் கொதிக்க வைத்து, முக்கால் தம்ளர் அளவில் நீர் வற்றியதும், அந்த நீரை நன்கு பிழிந்து, தினமும் இருவேளை பருகிவர, நடக்க முடியாமல் அவதிப்படுத்திய மூட்டு வீக்கங்கள் விரைவில் வடிந்து, வலிகளும் விலகிவிடும்.

தொண்டை புண்ணிற்கு :
தொண்டைப்புண் பாதிப்பை போக்கும் சித்தரத்தை சூரணம். சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, சரியாக பேச விடாமல் துன்பங்கள் தந்துவந்த தொண்டைப்புண் பாதிப்புகள் குணமாகிவிடும்.


அஜீரணத்திற்கு :
உலர்ந்த சித்தரத்தை ஒரு துண்டு எடுத்து, வாயில் இட்டு சுவைக்க, நாக்கில் காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை தோன்றும், அப்போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிவர, குமட்டல், வாந்தி பாதிப்புகள் சரியாகி விடும். மேலும், இதுவே, வறண்ட இருமலையும் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. உடல் சூட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக, சித்தரத்தை மருந்து அமையும்.

குழந்தைகளுக்கு :
குழந்தைகளின் மாந்தம் எனும் பால் செரியாமை, இளைப்பு சளி போன்ற பாதிப்புகள் விலக. உலர்ந்த சித்தரத்தை துண்டை விளக்கெண்ணையில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.


ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு :
சிறுவயது பிள்ளைகளுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் ஜுரம், சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் விலகிவிடும். இதையே பெரியவர்களும், சித்தரத்தையை நீரில் இட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் கற்கண்டை கலந்து பருகிவர, தீர்வுகள் கிடைக்கும்.

மூட்டு வலி தீர :
முதுமையின் பாதிப்பால், உடலில் வியாதிகள் எதிர்ப்பு சக்தி குறைந்து, கை கால் மூட்டுகளில், எலும்புகளின் இணைப்பில் வலிகள் தோன்றும், இதனால் வயது முதிர்ந்தவர்கள், உட்கார நடக்க முடியாமல் சிரமப்படுவர்.


எலும்புகள் பலம் பெற :
இந்த பாதிப்புகள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும், உடலுக்கு சிறந்த சக்தியளிக்கும் மருந்தாகும், இந்த மூலிகை மருந்து.

ஆஸ்துமா குணப்படுத்த :
சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும். இதையே, அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கும் குழந்தைகளுக்கும் அளித்து வர, விரைவில் குணமடைவர்.

சித்த்ரத்தை சூப் :
சித்தரத்தையின் முழுமையான நன்மைகளை அறிந்த கீழை ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், கொரியா, சீனா போன்ற தேசங்களில், தினசரி உணவில் சூப், துவையல் போன்ற வகைகளில் சேர்த்து, பயன்படுத்தி வருகின்றனர்.-Source: tamilasian

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!