சர்க்கரை நோயாளிகள் எளிதில் சோர்வடைவது ஏன்..?

நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி உலகின் பெரும்பாலான மக்களுக்கு மிகப் பெரிய கவலை தரும் விஷயமாக உள்ளது.

உடல் செயல்பாடுகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

இளைஞர்களிடையே முக்கியமாக 40 வயதிற்கும் குறைவான நபர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. சமநிலையான டயட் மற்றும் வாழ்க்கைமுறை, அதனுடன் இன்சுலின் போன்ற தேவையான மருந்துகள் போன்றவை முறையாக கையாளப்பட்டாலும் நீரிழிவு நோயை எப்போதும் சீராக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி நிறைய வாழ்க்கைமுறைகளை கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

வழக்கமான கண்காணிப்பு முதல் ஸ்கிரீனிங், மருத்துவரை அணுகி பரிசோதித்தல் போன்றவை மிகவும் அவசியம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை காரணமாக எழும் பிற பிரச்னைகளால் அதிக மன அழுத்தம், சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றையும் எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நீரிழிவு நோயை ஏற்றுக்கொள்வதும், வாழ்நாள் முழுவதும் அதனை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதும் மிகவும் முக்கியம். இதனால் விரக்தி ஏற்பட்டாலும் உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.

பொதுவாக செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதற்கு இன்சுலின் ஒரு சாவியாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயில் ஏற்படும் இன்சுலின் குறைபாட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று செயல்பட முடியாததால் செல்களின் ஆற்றல் குறைந்து உடலில் சோர்வு ஏற்படுகிறது.

உடல் சோர்வு ஏற்பட வேறு சில காரணங்களாக கருதப்படுவது:

1. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருத்தல் அல்லது மிக குறைவாக இருத்தல்.

2. நீரிழிவு நோயின் பக்க விளைவுகளான சிறுநீரக பாதிப்பு, இருதய நோய், பக்கவாதம், வைட்டமின் பாதிப்பு போன்ற பிரச்சினைகள்.

3. தூக்கமின்மை மற்றும் உடல் பருமன்.

4. உட்கொள்ளும் மாத்திரைகளின் விளைவுகள்.

5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

6. நெடுங்காலமாக இருக்கும் நோய்த்தொற்று.

7. வேறு சில தொடர்புடைய நோய்கள்.

8. வைட்டமின் குறைபாடு.

9. மனஅழுத்தம்.

10. ரத்தசோகை.

நீரிழிவு நோயானது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவது அவசியம். எனவே தொடர் பரிசோதனை மற்றும் முறையாக மருந்துகள் உட்கொள்ளுதல் அவசியம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!