நகம் கடிப்பதால் இவ்வளவு பிரச்சனை வருமா..?

நகங்களை கடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு சிறுவயதிலேயே வந்து விடுகிறது. டென்ஷனாகவோ, மனக்குழப்பத்திலோ இருந்தால் நகத்தை கடிக்கும் சுபாவமும் பலரிடம் இருக்கிறது. அப்படி நகங்களை கடிப்பது விரல்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல்வேறு தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும்.

நகங்களுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்கள் தொற்று பாதிப்பை அதிகப்படுத்திவிடும். நகத்தை தொடர்ந்து கடிப்பதால் விரல்களில் வீக்கம் ஏற்படுவது, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறுவது, சீழ்படிவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். பல் ஈறுகளில் காயம், முன்புற பற்களில் குறைபாடு போன்ற வாய்வழி பிரச்சினைகளும் நகம் கடிப்பதால் உண்டாகும்.

நீண்டநாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பற்களில் கறைகளை உருவாக்கி இறுதியில் பற்களை சிதைத்துவிடும். பற்களில் விரிசலையும் ஏற்படுத்திவிடும். நகங்களை கடிக்கும்போது அதிலிருக்கும் துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், நோய்தொற்று போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிறுதொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

நகம் கடிக்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்கள் எளிதில் குற்ற உணர்வுக்கு ஆளாகுவார்கள். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பும் குறைந்துபோகும். நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நெயில் பாலிஷ் உபயோகிக்கலாம்.

அதில் டெனாடோனியம் பென்சோயேட் எனும் ரசாயனம் கலந்திருக்கிறது. அது கசப்பு தன்மை கொண்டது. அது நகம் கடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும். பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!