கொரோனாவை ஒழித்துக்கட்ட உதவும் வேப்ப மரத்தின் சாறு – ஆராய்ச்சி முடிவு.!

வேப்ப மர பட்டை சாறினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு- சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள் குறித்தும் இன்றும் உலகளாவிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அப்படி ஒரு ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐஐஎஸ்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

  • இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள வேப்ப மரம், ஒட்டுண்ணி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்திக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.
  • வேப்ப மரத்தின் பட்டை சாறு, மலேரியா, வயிறு மற்றும் குடல்புண்கள், தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி உள்ளது.
  • தற்போதைய ஆராய்ச்சி, வேப்ப மரப்பட்டையின் கூறுகள், பரவலான வைரஸ் புரதங்களை குறிவைக்கும் என தெரிய வந்துள்ளது. இது சார்ஸ் கோவ்-2 உட்பட வளர்ந்து வரும் கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகளுக்கு எதிராக வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படுகிற திறனைக் காட்டுகிறது.
  • இந்த ஆராய்ச்சியை நடத்திய குழுவில் பங்கு வகித்துள்ள அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் மரிய நாகல் கூறுகையில், “ கொரோனா வைரசால் யாரேனும் பாதிக்கப்படுகிறபோது, கடுமையான நோய் ஆபத்தைக் குறைக்கும் வேம்பு அடிப்படையிலான மருந்து உருவாக்குவதே எங்கள் ஆராய்ச்சியின் குறிக்கோள். புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் வெளிப்படும் ஒவ்வொரு முறையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டியதில்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.
  • வேப்ப மர பட்டை சாறினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு- சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
  • வேப்ப மரப்பட்டை சாறு பல்வேறு இடங்களில் உள்ள கொரோனா வைரசின் பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு, வைரஸ் நுழைவை தடுக்கிறது.
  • வேப்ப மர பட்டை சாறு, கொலராடோ பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் மரிய நாகல் ஆய்வுக்கூடத்தில் கொரோனா பாதித்தவரின் நுரையீரல் செல்களில் செலுத்தியும் பரிசோதிக்கப்பட்டது. இதில், கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என தெரிய வந்துள்ளது. நோய் தொற்றுக்கு பிறகும் கூட வைரஸ் நகல் எடுப்பதையும், பரவலையும் குறைக்கிறது.
  • ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், வேப்ப மர பட்டை சாற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை கண்டறிவதாகும். இந்த கூறுகள், சார்ஸ் கோவ்-2 வின் பல்வேறு பகுதிகளுடன் பிணைக்கப்படுவதால் இது உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்.
  • கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான புதிய வைரஸ் தடுப்பு சிகிச்சைகளுக்கு இந்த கண்டுபிடிப்புகள் வழிகாட்டும்.

இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!