ஆக்சிஜன் அளவு குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம்.


கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் ஆக்சிஜன்பற்றாக்குறையால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. கொரோனா சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. அப்படி ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்தால் உடல் உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டாகும். தக்க சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம். உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:

சுவாசிப்பதில் சிரமம்: கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம். எனினும் சுவாசிப்பதற்கு சிரமம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சிலர் உணரக்கூடும். உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதபோது ஒருவரால் இயல்பாக செயல்பட முடியாது. சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மார்பு வலி: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மார்பு வலி உண்டாகக்கூடும். மார்பு நெரிசல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களில் சளி படர்வது மார்பு நெரிசலுக்கு காரணமாக அமையும். இருமலும் சேர்ந்து அடர்த்தியான சளியை வெளியே கொண்டு வரும். சுவாசிக்கும்போது ஒருவிதமான ஒலியும் வெளிப்படக்கூடும். மூச்சுத்திணறலையும் உணரக்கூடும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.

மனக்குழப்பம்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிந்தனை திறனும் பலவீனமடையும். மன குழப்பமும், தலைவலியும் ஒருசேர வாட்டிவதைக்கும். இவை ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை தீர்மானிக்கும் அடையாளமாக இருக்கலாம்.

நீல நிற உதடு: உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். இந்த மாற்றம், சயனோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதவர்கள், நாளங்களுக்குள் அதிக அளவு ஆக்சிஜனேற்றப்பட்ட ஹீமோகுளோபின் கொண்டிருப்பவர்களுக்கு நீல நிறத்தில் உதடுகள் காட்சியளிக்கலாம்.

மூக்கு விரிவடைதல்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சு விடுவதில் பாதிப்பு நேரும். வழக்கமாக சுவாசிக்கும்போது மூக்கு இயல்பாக இருக்கும். ஆனால் சுவாசத்தில் பிரச்சினை ஏற்படும்போது மூக்கின் முனைப்பகுதிகள் இரண்டும் விரிவடையும். நாசிப்பாதையின் திறப்பும் வழக்கத்தை விட விரிவடைந்திருக்கும். இத்தகைய அறிகுறிகள் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதையும், சுவாசிப்பதில் இருக்கும் சிரமத்தையும் வெளிப்படுத்தக்கூடியவை. அதனால் இதனை சாதாரணமாக கருதக்கூடாது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மூச்சு பயிற்சி: மூச்சு பயிற்சி மேற்கொள்வது நுரையீரலின் ஆரோக்கியத்தையும், ஆக்சிஜன்அளவையும் மேம்படுத்த உதவும். பல சுவாசப்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றுள் 4-7-8 என்ற சுவாசப்பயிற்சி எளிமையானது, சிறப்பானது. தரையில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். வாயை நன்றாக மூடிவிட்டு, மூக்கு வழியாக 4 விநாடிகள் வரை மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். அப்போது மனதிற்குள் நான்கு வரை எண்ணிக் கொள்ள வேண்டும். பின்பு 7 வினாடிகள் வரை அப்படியே மூச்சை நிறுத்தி வைக்க வேண்டும். பின்பு வாய் வழியாக 8 வினாடிகள் வரை மூச்சை வெளியே விடவேண்டும். தொடர்ந்து மூன்று முறை இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 7 வினாடிகள் வரை மூச்சை நிறுத்தி வைத்திருப்பது கடினமாக இருக்கும். ஆனால் நாளடைவில் எளிதாகிவிடும். நான்கு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து 7 விநாடிகள் வைத்திருந்து 8 விநாடிகள் வெளியேற்றுவதால் இது 4-7-8 சுவாசப் பயிற்சி எனப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!