கொரோனா தொற்று… வீட்டில் செய்ய மறக்கக்கூடாதவை!

அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நமது கவனத்துக்கு வராத அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.


இன்றைய வாழ்க்கை முறையில் காலில் சக்கரம் கட்டாதக்குறையாக அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தின் நடுவே அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். அவற்றுள் முக்கியமானது வீட்டில் நாம் மேற்கொள்ளவேண்டிய பழக்கங்கள். நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நமது கவனத்துக்கு வராத அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.

கதவின் கைப்பிடிகளை துடைத்தல்

வீட்டிற்கு வரும் உறவினர்கள் அந்நியர்கள் என அனைவரின் கைகளும் படும் பகுதியான இதில் அழுக்கும், கிருமிகளும் அதிகம் படிந்திருக்கும். தரையை துடைப்பது, கழிப்பறையை சுத்தம் செய்வதுஎன்று அன்றாடம் தூய்மை பணியை செய்தாலும் கதவின் கைப்பிடிகளை சுத்தம் செய்ய பலரும் மறந்விடுகிறோம்.கொரோனா நோய் தொற்றினை தவிர்க்க கதவின் கைப்பிடிகளை தூய்மையாக வைப்பது முக்கியம்.

செல்லப்பிராணிகள் சாப்பிடும் கிண்ணத்தை தூய்மை செய்தல்

வீட்டில் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் சாப்பிடுவதற்குகென்று கிண்ணம் வைத்திருப்போம். காலையில் வைத்த உணவில் செல்லப்பிராணி சாப்பிட்டது போக மீதமிருப்பதை அற்புறப்படுத்தி தூய்மை செய்யாமல் சிறிது நேரம் கழித்து சாப்பிடும் என்று மாலை வரை அப்படியே வைத்திருப்போம். இதனால் அந்த கிண்ணம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள இடமும் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும். இது செல்லப்பிராணிக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீங்கை விளைவிக்கும்.

சமையலுக்கு ஒரே கட்டிங் போர்டை பயன்படுத்துதல்

சில வீடுகளில் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஒரே கட்டிங் போர்டை பயன்படுத்துவார்கள். இறைச்சி, மீன் போன்றவற்றை வெட்டியபின் கழுவி வைத்தாலும், அதில் பாக்டீரியா போன்ற கிருமிகள் இருக்கத்தான் செய்யும். அவை காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டும் போது உணவோடு கலந்து உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே காய்கறிகளுக்கும், இறைச்சிக்கும், தனித்தனியே கட்டிங் போர்டுகள் வைத்திருக்க வேண்டும்.

பழைய நான்ஸ்டிக் பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துதல்

நான்ஸ்டிக் பாத்திரங்கள் சமைப்பதற்கு வசதியானவை. இவற்றில் சமைப்பதற்கு குறைவான அளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதும். அதே சமயம் மிக பழைய நான்ஸ்டிக் பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது இதில் இருக்கும் டெப்லான் பூச்சு கொஞ்சம் கொஞ்சாக சமைக்கும் உணவில் கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படும்.

குளிர்சாதன பெட்டியை தூய்மை செய்தல்

முடிந்தவரை வாரம் ஒருமுறை அல்லது மாதம் இரு முறையாவது குளிர்சாதன பெட்டியை சுத்தப்படுத்த வேண்டும். இதனால் அதில் தேவையற்ற கிருமிகள் வளருவதை தடுக்க முடியும். கழற்றி சுத்தம் செய்யும் வகையில் உள்ள பாகங்களை நன்கு சோப்பு போட்டு கழுவி உலர வைத்த பின்னர் மீண்டும் பொருத்த வேண்டும். வாரம் தோறும் காய்கறி வாங்க செல்வதற்கு முன்பு குளிர்சாதன பெட்டியில் இருப்பவற்றை சுத்தம் செய்த பிறகே புதிய காய்கறிகளை அடுக்க வேண்டும்.

இவ்வாறு இன்னும் பல செயல்களை நாம் கவனித்து செய்தால் வீடும் நாமும் தொற்று பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!