ஒரே நாளில் 2 பேர் மரணம்! உயிர் குடிக்கும் கொடூர டெங்கு!


டெங்கு காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை மாங்காட்டில் ஆர்.கே.புரம் என்ற குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திலகா. இத்தம்பதியினருக்கு பிரித்திகா என்ற 12 வயது மகளுள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே நேற்று காலை அவர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சலிருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க தொடங்கினர். ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பிரித்திகா மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவமானது அவருடைய பெற்றோர்களையும் உறவினர்களையும் உருக்குலைய வைத்துள்ளது. மேலும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், “காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். டெங்கு காய்ச்சல் என்பது உறுதியானால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள தவற வேண்டாம்” என்று கூறினார்.

இதேபோன்று ஓசூர் மாவட்டத்திலுள்ள ஆலஹள்ளி என்ற இடத்தில் தினேஷ் என்ற 16 வயது மாணவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். துரதிஷ்டவசமாக நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார்.

இவ்வாறு டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!