12 நாட்கள் மாயம்…. லண்டனில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக தலைவர் மகன்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

11 நாட்களாக தேடப்பட்டு வந்த தெலங்கானா பாஜக தலைவரின் மகன் தற்கொலை செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் உதய் பிரதீப். இவர் பாஜக கட்சியின்‌ தலைவராக உள்ளார். இவருடைய மகனின் பெயர் உஜ்வால் ஸ்ரீவர்ஷா. இவருடைய வயது 23. இவர் தெலுங்கானாவில் பொறியியல் படித்தார். மேல்படிப்பிற்காக லண்டன் சென்றார். உஜ்வால் தினமும் தன் பெற்றோருடன் பேசுவதை வழக்கமாக கொண்டவர்.
ஆனால் இறுதியாக 21-ஆம் தேதியன்று பேசியிருந்தார். அதன் பிறகு அவர் தன்னுடைய பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் பயந்து போன பிரதீப் தன் மகனை காணவில்லை என்று லண்டன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனிடையே உஜ்வாலின் பை மட்டும் கடற்கரை அருகே கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உஜ்வாலின் பெற்றோர் கடுமையாக மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உதவி செய்வதாக உறுதியளித்தார். லண்டன் காவல்துறையினர் உஜ்வாலின் உடலை தேடி பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சசெக்ஸ் நகரத்தில் மலைமுகடு அமைந்துள்ளது. இங்கு அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் உஜ்வாலின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடமானது பிரிட்டனில் அதிக தற்கொலைகள் நடக்கும் இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.