ஏழரை சனியின் பிடியிலிருந்து தப்பிக்க போகும் ராசிக்காரர் யார்..? பரிகாரம் என்ன


நவகிரகங்களில் சனிபகவானுக்கு மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள். காரணம் சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கிறார். நிறைய படிப்பினைகளை கற்றுத்தந்து விட்டுத்தான் செல்வார். ஏழரை சனி காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையின் அடி முதல் முடி வரைக்கும் ஆட்டி படைத்து விடுவார். இதுநாள் வரை ஏழரை சனியின் பிடியில் இருந்த விருச்சிக ராசிக்காரர்களை கேட்டால் தெரியும் பட்ட கஷ்டங்கள் என்ன என்று ஒரு புத்தகமே எழுதுவார்கள். வரப்போகும் சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் தடுமாற வேண்டாம்.

சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் தனுசு, மகரம், கும்பம், ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையை கற்றுத்தரப்போகிறார் சனி பகவான். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் என்று பார்க்கலாம்.


தைரியம் கூடும்
விருச்சிக ராசிக்காரர்களே கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். 2020 ஜனவரி முதல் உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பல ஆண்டுகாலமாக பணம் வாங்கி விட்டு ஏமாற்றியவர்கள் திருப்பி தருவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. சனி விருச்சிகத்தை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம்.வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும்.


பணவரவு அதிகரிக்கும்
சனிபகவான் புதிய வேலையை தருவார். குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். பாத சனி விலகுவதால் கால்வலி பிரச்சினை தீரும் ஆரோக்கியம் கூடும். தேவையான தனவரவை தருவார். பணப்பற்றாக்குறை தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். சனி பகவானுக்கு நன்றி சொல்ல திருநள்ளாறு சென்று வாருங்கள்.

ஜென்ம சனி இனி பாதசனி
2020 ஜனவரி முதல் தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. சனி கேதுவை விட்டு விலகுவதால் நன்மை. தனுசு ராசிக்கு தனாதிபதி தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். ஏழரை சனி முடியலை இருந்தாலும் ஜென்மத்தில் பட்ட சிரமங்களை இனி படப்போவதில்லை. இரண்டரை வருஷம் நிம்மதி தருவார்.


வாழ்க்கையில் வெளிச்சம்
தனுசுக்கு தனாதிபதி சனி இப்போது இரண்டாம் வீட்டில் அமர்கிறார். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை. கடல் கடந்து செல்பவர்களுக்கு முன்னேற்றம் வரும். கடகத்தை சனி பார்ப்பதால் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி பார்வை படுகிறது. வருமானம் வரும். சனி வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். பொறுமை தேவை இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம். கஷ்டங்கள் விலகும் சங்கடம் தீரும். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் தங்க சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் குறையும் நன்மைகள் நடைபெறும்.

பொறுமை தேவை
மகர ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். 30 வயதை கடந்த வர்களுக்கு முன்னேற்றகரமான காலம் காரணம் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். சனியின் பார்வை, மீனம், கடகம் துலாம் ராசியின் மீது விழுகிறது. தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கை முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார்.


பயணங்களில் எச்சரிக்கை தேவை.
உழைப்பால் உயர்ந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும். பிசினஸ் செய்ய நினைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தரும். நிறைய உதவி கிடைக்கும் வளர்ச்சிக்கு உதவும் நன்மைகள் கிடைக்கும். பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் சனிபகவானை வணங்க பாதிப்புகள் குறையும்.

ஏழரை என்ன செய்யும்
கும்பம் ராசிக்கு 12ஆம் வீட்டில் சனி அமரப்போகிறார். விரைய சனி. உங்க ராசிநாதன் சனி அதிக பாதிப்பை தர மாட்டார். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும். சில விசயங்களில் கவனம் தேவை. பண விரையம் வரும் லாப சனியாக இருந்து விரைய சனியாக மாறுகிறார். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும். 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் கவனம். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்களை சேர்ப்பீர்கள்.

மருத்துவ செலவு
சாதக பாதகம் நிறைந்த சனிப்பெயர்ச்சி இது. முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பயணங்கள் பண்ணும் போது கவனம் தேவை. மருத்துவ செலவுகளை தருவார். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். பாசிட்டிவ் எண்ணங்கள் தேவை. தான தர்மங்கள் தேவை- திருமணம் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். மாணவர்களுக்கு கவனம் தேவை. படிப்பில் கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொறுமை தேவை. நிதானம் அவசியம். சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் இந்த சனி பெயர்ச்சி வளர்ச்சியை தந்து உங்களைக் காப்பாற்றுவார். குச்சனூரில் அருள்பாலிக்கு சுயம்பு சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!