கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி முட்புதரில் அமர வைத்து மாணவர்கள் செய்த அட்டூழியம்..!


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பிராட்வேயில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்களுக்கும், பூந்தமல்லியில் இருந்து பஸ்சில் வருபவர்களுக்கும் இடையே யார் பெரியவர்? என்பதில் கோஷ்டி மோதல் இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக, நேற்றுமுன்தினம் அரும்பாக்கம் அருகே பெரம்பூரில் இருந்து திருவேற்காடு நோக்கி மாநகர பஸ்சில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை, 4 மொபட்டுகளில் வந்த அதே கல்லூரியை சேர்ந்த எதிர்கோஷ்டி மாணவர்கள் நடுரோட்டில் ஓடஓட விரட்டி பட்டாக்கத்தியால் வெட்டினர்.

இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அளித்த தகவலின்பேரில் நேற்று கவியரசன், ரவிவர்மன் ஆகிய மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 2 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உள்ளது.

மாநகர பஸ்சை வழிமறித்து மாணவர்களை மற்றொரு கோஷ்டியினர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மேலும் ஒரு வீடியோ வெளியானது.

அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர் முட்புதர் அடங்கிய பகுதியில் நிர்வாணப்படுத்தி ஜட்டியுடன் கத்தி முனையில் அமர வைக்கப்பட்டு உள்ளார்.

அவரை எதிர்கோஷ்டி மாணவர்கள், 53 ரூட்டுக்கு ஜெ. பாரீஸ் ரூட்டை ஆபாசமான வார்த்தைகளால் சத்தமாக சொல்ல சொல்லி அதனை ஒரு நோட்டில் எழுதுமாறும் மிரட்டுகின்றனர். அந்த மாணவரும் மிரட்டலுக்கு பயந்து அதேபோல் சத்தமாக சொல்லியபடி நோட்டில் எழுதுகிறார். திடீரென அவரது தலையில் ஓங்கி அடிக்கப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கத்திமுனையில் ஜட்டியுடன் அமர வைக்கப்பட்டு உள்ளவர் பிராட்வேயில் இருந்து பஸ்சில் வரும் மாணவர் எனவும், அவரை மிரட்டுவது பூந்தமல்லியில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்கள் எனவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

எனவே நேற்றுமுன்தினம் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிய சம்பவத்துக்கு இந்த வீடியோதான் காரணமா? அல்லது அந்த மோதலுக்கு பிறகு அதற்கு பதிலடியாக பாரிமுனையில் இருந்து வரும் மாணவரை மடக்கி பிடித்து பூந்தமல்லியில் இருந்து வரும் மாணவர்கள் மிரட்டினார்களா? என்ற கோணத்தில் அரும்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!