7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர குடிகார தந்தை…!


மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அநியாயமாக 7 வயசு மகளை அடித்தே கொன்றுவிட்டார் கொடூர குடிகார தந்தை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை பூத்தோட்டதெருவை சேர்ந்தவர் கைலாசம். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளான சுகிர்தாவுக்கு 7 வயசாகிறது. அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

கைலாசத்திற்கு தினமும் குடிக்காவிட்டால் பொழுது போகாது. அதிலும் குடித்துவிட்டு மனைவியையும், 2 குழந்தைகளையும் வெளுத்து விட்டுதான் தூங்கவே போவார். இப்படியேதான் வழக்கமாக வைத்திருந்து இருக்கிறார்.

இப்படித்தான் நேற்று இரவும் தண்ணி அடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பா-அம்மா சண்டை போடுவதை பார்த்து மிரண்ட குழந்தை சுகிர்தா அவர்கள் நடுவே சென்றாள். இதில் மண்டை நிறைய போதையிலும், சண்டை போட்ட ஆத்திரத்திலும் இருந்த கைலாசம், சுகிர்தாவை பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டார். இதில் சுகிர்தா அங்கேயே சுருண்டு விழுந்து மயக்கமாகி விட்டாள்.

இதனைகண்டு பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே சுகிர்தா இறந்துவிட்டாள். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்துவிட்டால், பிரச்சனை ஏற்படும் என்பதை அறிந்த கைலாசம், “மகள் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டாள்” என்று நாடகமாடினார்.

ஆனாலும் விஷயம் விக்கிரமசிங்கபுரம் போலீசாரின் காதுகளுக்கு எட்டியதும் விரைந்து வந்து, கைலாசத்தை கைது செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!