ஷீரடி சாயிபாபா பக்தரா நீங்க..? அப்படியானால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

ஷீரடி சாயி பாபா, 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக் காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான ஷீரடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித ஷீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம். சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் செப்டம்பர் 28, 1838 இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்த பொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.

மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்