ஆறாமிட சனியால் கொட்ட போகிறது அதிர்ஷ்டம் – கடக ராசிக்காரர்களே இனி ஆனந்தம் தான்…!!


வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ந்து செல்கிறார். அதனால் கடக ராசிக்காரர்களுக்கு என்னென்ன சாதக பாதகங்கள் உண்டாகும் என பார்க்கலாம்.

கடக ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத நிலைமைகளையும், மகன்-மகள் விஷயங்களில் சாதகமற்ற பலன்களையும் கொடுத்து கொண்டிருந்த சனி தற்போது நல்ல பலன்களைத் தரக்கூடிய ஆறாம் இடத்துக்கு மாறுகிறார்.

சனிபகவான் 12 ராசிகளையும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் சுற்றி வரக் கூடியவர். அதாவது ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை வருடம் காலம் இருப்பார். 30 வருடங்கள் கொண்ட அவரின் முழு சுற்றில் மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய மூன்று இடங்களில் வரும்போது மட்டுமே நன்மைகளைத் தருவார்.


30 ஆண்டுகளுக்கான தன்னுடைய முழு சுற்றில் வெறும் ஏழரை வருடங்கள் மட்டுமே சனி நன்மைகளைத் தர கடமைப்பட்டவர். இப்படி 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வர இருக்கும் நன்மைகளைத் தரக் கூடிய ஆறாமிடத்துக்கு சனி கடக ராசிக்காரர்களுக்கு அமைய இருப்பதால், நடக்கவிருக்கும் சனிபெயர்ச்சியால் பெரிய நன்மைகளை அடைய போகும் ராசிகளில் கடகமும் ஒன்று. எனவே வர இருக்கின்ற ஆறாமிட சனியின் நன்மைகளை எதிர்கொண்டு அனுபவிக்க கடக ராசிக்காரர்கள் தயாராக இருங்கள்.

இந்த சனி மாற்றத்தினால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள், ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட சங்கடங்களைக் கொடுத்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களும் நீங்கி ஒரு நிம்மதியான சூழ்நிலை உங்களுக்கு அமைய இருக்கிறது.

அதேபோல கடந்த காலங்களில் மகன்- மகள் போன்றவர்களால் ஏற்பட்டு இருந்த மன வருத்தங்களும் நீங்கும். மகனுக்கோ, மகளுக்கோ நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லையே, வீட்டில் எந்தவித சுப காரியங்களும் நடக்கவில்லையே, படித்து முடித்தும் குழந்தைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப் பட்டவர்களின் குறைகள் தீரும்.


மேலும் திருமணமான மகன், மகளுக்கு வாழ்க்கையில் சிக்கல் இருக்கிறதே என்று பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த சனி மாற்றத்தினால் அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து, அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதைக் காண முடியும். குறிப்பாக என்ன காரணம் என்றே தெரியாமல் இதுவரை தடையாகிக் கொண்டிருந்த மகன் மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி ஊர் வாயை அடைப்பீர்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியின் மூலமாக கடக ராசிக்காரர்கள் ஒரு புதிய உத்வேகம் தரும் சூழலில் அடி எடுத்து வைக்க இருக்கிறீர்கள். பிறந்த ஜாதகப்படி யோகமான தசாபுக்திகளும் உங்களுக்கு நடக்குமாயின், எதிர்காலத்தில் நீங்கள் மிக நன்றாக இருப்பதற்கான ஒரு சிறந்த அஸ்திவாரத்தை இப்போது சனி அமைத்துத் தருவார்.

ஆறாமிடத்து சனியால் கடனற்ற ஒரு நிலை உருவாகும் என்பதால் கடன் தொல்லையால் இதுவரை அவதிப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு வகையில் அந்த கடனை அடைத்து முழுமையான கடன் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சந்தித்து கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் விலகி நானே ராஜா, நானே மந்திரி என்கிற ஒரு நிலை உருவாகும். ஆரோக்கியம் இல்லாதவர்களின் உடல்நலம் மேம்படும்.


பொதுவாக கடக ராசிக்காரர்க்கள் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பொதுநலவாதிகள் என்றாலும் உங்களை வேலை செய்ய வைக்க இன்னொரு ஆள் தேவைப்படும். யாராவது ஒருவர் உங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதை விரும்புவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருக்கும் கடகத்தினருக்கு இப்போது இரண்டு மடங்கு நல்ல பலன்கள் நடக்கும்.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் தொல்லை தீர்ந்து நிம்மதி உண்டாகும். சொந்த தொழில் நிறைவான லாபம் தரும். தொழில் கூட்டாளிகள் தொழில் விருத்திக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.


தர்மகாரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள்.

கடக ராசிப் பெண்களுக்கு இந்தக் சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களை அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகளும் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் உங்கள் சொல் ஏற்கப்படும்.

பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும்.


பரிகாரங்கள்:

சனிபகவானால் கிடைக்கும் நன்மைகளை அதிகமாகப் பெற ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் ஒரு கால் இழந்த மாற்றுத் திறனாளிக்கு ஊன்றுகோல் தானம் கொடுங்கள்.

வசதி உள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள் தானம் தரலாம். சனி சம்பந்தமான தானங்களை வீட்டில் தரக்கூடாது. பொது இடத்தில் அல்லது கோவிலில் வைத்துக் கொடுப்பது நல்லது.-Source: tamil.eenaduindia