புல்வாமா தாக்குதலுக்கு சானியா மிர்சா கண்டனம்… வம்பிக்கிழுத்தவர்களுக்கு பதிலடி..!


புல்வாமா தாக்குதலுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்குத் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்திருக்கிறார். இந்தத் தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையில் அசாதாரண சூழல் நிலவும் போதெல்லாம், சானியா மிர்சாவை நெட்டிசன்கள் சிலர் வம்பிழுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், புல்வாமா தாக்குதல் குறித்து சானியா மிர்சா என்ன சொல்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அப்படி தன்னை ட்ரோல் செய்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சானியா மிர்சா ட்விட்டரில் மிக நீண்ட பதிவொன்றை இட்டிருக்கிறார்.

அதில், “பிரபலங்கள் தங்கள் தேசப்பற்றைக் காட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்றத் தாக்குதல்களைக் கண்டித்து பதிவிட வேண்டும் என எண்ணுபவர்களுக்காக இந்தப் பதிவு. ஏனென்றால், வெறுப்பு மற்றும் உங்களின் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்புக் கிடைக்காததால், எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாதத் தாக்குதல்களை பொதுவெளியில் கண்டிக்க வேண்டும் என்பதில்லை.

அதேபோல், எனது வீட்டு மொட்டை மாடி மீது நின்று கொண்டும், சமூக வலைதளங்களில் கூவிக் கூவி எனது எதிர்ப்பைக் காட்ட வேண்டியதில்லை. தீவிரவாதம் எந்தவகையில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. அதேபோல், அதைப் பரப்புபவர்களும் வன்மையான கண்டனத்துக்குரியவர்களே.

சரியான முறையில் சிந்திக்கும் அனைவருமே தீவிரவாதத்துக்கு எதிரானவர்களே. அப்படி இல்லையென்றால், அதுதான் பிரச்னை. நான் எனது நாட்டுக்காக வியர்வை சிந்தி விளையாடுகிறேன். அப்படித்தான் எனது நாட்டுக்கு நான் சேவை புரிகிறேன். தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!