ஏழாமிடம் அவ்வளவு நன்மையும் இல்லை.. தீமையும் இல்லை! மிதுன ராசிக்காரர்களே பயம் வேண்டாம்!


வருகிற டிசம்பர் 19 ஆம் நாள் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ந்து செல்கிறார். அந்த சனிப்பெயர்ச்சியின் போது மிதுன ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்கள் மற்றும் கெடுபலன்கள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம்.

மிதுன ராசிக்கு தற்போது ஆறாமிடத்தில் இருந்து மாறி ஏழாம் இடத்துக்கு சனிபகவான் செல்லவிருக்கிறார். கடந்த காலங்களில் சனிபகவான் நிலை கொண்டிருந்த ஆறாமிடம் மிக யோகமான இடம். தற்போது மாற இருக்கிற ஏழாமிடம் அவ்வளவாக, நல்ல பலன்களைத் தரக்கூடிய இடம் இல்லை.

கோச்சார பலன்கள் என்று ஒன்று உண்டு. அதாவது ஒன்பது கோள்களின் இருப்பிடத்தையும் கணித்து பொதுவாக சொல்லக்கூடியது. அந்த அமைப்பில் பலன் சொல்ல முற்படும் போது, சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற குருப்பெயர்ச்சி ஏறத்தாழ மூன்று வருடங்களுக்குப் பிறகு மிதுனத்துக்கு யோகங்களைத் தருகிற விதத்தில் அமைந்திருப்பதால் இன்னும் சில காலத்துக்கு கோட்சார பலன்கள் மிதுன ராசிக்கு சாதகமாகவே இருக்கும்.

மேலும் ஏழாமிடத்துக்கு வருகின்ற சனிபகவானால் கணவன்-மனைவி இடையே கருத்து வேற்றுமை, பிரிவு, குடும்பத்தில் குழப்பம், ஆரோக்கியக் குறைவு, நண்பர்கள், பங்குதாரர்களிடையே மனக் கசப்பு, தந்தைவழி உறவினர்களால் விரோதம் போன்ற பலன்கள் சொல்லப்பட்டிருந்தாலும் மிதுனராசிக்கு பாக்கியங்களைத் தரும் ஒன்பதுக்குடையவன் சனி என்கிற வகையில் மற்ற ராசிகளுக்கு அவர் ஏழாமிடத்தில் இருக்கும்போது தருகின்ற கெடுபலன்களைப் போல மிதுனத்துக்கு தருவது இல்லை.


எனவே தற்போது நடைபெறுகிற சனி மாற்றம் மிதுனத்துக்கு நிச்சயமாக கெடுபலன்களைத் தரப்போவது இல்லை. மாறாக ஒன்பதுக்குடையவன் ராசியைப் பார்க்கிறான் என்கிற விதத்தில் மிதுனத்துக்கு சில நன்மைகளே கூடுதலாக நடைபெறும்.

பொதுவாக கோச்சார பலன்கள் எல்லா ராசியினருக்கும் ஒரே மாதிரியாக அமையாது. மாறுகிற கிரகம் அந்த ராசிக்கு நல்ல யோகத்தை தருவதா? அவ யோகத்தை தருவதா? என்பதை வைத்துதான் துல்லியமான பலன்களைக் கணிக்க முடியும்.

பாவ கிரகமாக இருந்தாலும் ஒரு ராசிக்கு யோகம் செய்ய வேண்டிய கிரகமாக அது இருந்தால் கெடுபலன்களைத் தந்துவிடுவது இல்லை. அந்த அமைப்பின்படி மிதுன ராசிக்கு தற்போதைய சனி மாற்றம் உறுதியாக கெடுதல்களை எதையும் தராது.

ஆயினும் சனிபகவான் ராசியைப் பார்க்கப் போவதால் இந்த சனி மாற்றத்தினால் உங்களுடைய குணநலன்களில் சிறிது மாற்றம் இருக்கும். குறிப்பாக சனியின் தனிப்பட்ட குணமான பிடிவாதம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிலும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். சற்று சுயநலக்காரனாக மாறி விடுவீர்கள். சனியின் பார்வை உடல், மனம் இரண்டையும் இறுக்கமாக்கும் என்பது விதி.

எனவே நடுத்தர வயதில் உள்ளவர்கள் தங்களுடைய உடல்நலத்தில் அக்கறையோடு இருக்க வேண்டியது அவசியம். ராசியைப் பார்க்கும் சனி இனம் புரியாத கவலைகளையும், நோயே இல்லாவிட்டாலும் தனக்கு ஏதோ ஒன்று இருக்கின்றது என்கிற எண்ணத்தையும் கொடுத்து மனத்தையும், உடலையும் அலைக்கழிப்பார் என்பதால் இதுபோன்ற விஷயங்களில் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.


மனசஞ்சலமும் ஏதாவது தீமை நடந்தவிடுமோ என்ற ஒருவித பயமும் மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கும்.

சனி தற்போது குருவின் வீட்டில் அமர போவதாலும், இன்னும் ஒரு வருடத்துக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் தனது புனித பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் மிதுன ராசிக்காரர்களுக்கு கெடுதல்கள் இல்லை.

முதல் ஒரு வருடத்திற்கு குருவின் பார்வை உங்களைக் காப்பாற்றுகிற அமைப்பில் இருக்கும்போது அடுத்த வருடம் ராசிக்கு குருவின் பார்வை விலகும் நேரத்தில் சனியுடன் ராகு- கேதுக்கள் இணைந்து அவருடைய வீரியத்தை இழக்க வைப்பதால் மிதுன ராசிக்கு இந்த சனி மாற்றத்தால் எந்தவித கெடுதல்களும் நடக்காது என்பது உறுதி.

சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற ஆன்மிகப் பயணங்களும் இருக்கும்.

பெண்களுக்கு நகை சேரும் காலம் இது. வேலைசெய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிடித்தமில்லாத வேலையில் இருப்பவர்கள் தகுதிக்கேற்ற வேலையில் சேர்வீர்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

வியாபாரிகளுக்கு தொழில் நல்லபடியாக நடக்கும் காலகட்டம் இது. நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். வருமானத்துக்குக் குறைவிருக்காது.


சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

சனிபகவானின் பார்வை நான்காம் வீட்டில் விழுவதால் வீடு, வாகனம், தாயார், தன்சுகம், உயர்கல்வி போன்ற விஷயங்களில் சில எதிர்மறை பலன்களும், சாதகமற்ற நிலைகளும் இருக்கும். அதேபோல வாகன மாற்றம், புதிய அதிகவிலை உள்ள வாகனம் வாங்குதல் போன்றவற்றில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும். ம். இளையவர்களுக்கு மனத்திற்குப் பிடித்தமான வேலை அமையும். திருமணப் பருவத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணையை இப்போது சனிபகவான் அடையாளம் காட்டுவார். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள்.


இந்த சனிப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை ஏழாமிடத்து சனிபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதையும் தராமல் மிதமான நற்பலன்களைத் தரும் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் அய்யப்ப பக்தர்கள் நான்கு பேருக்கு உங்கள் வீட்டில் இல்லாமல் பொது இடத்தில் அல்லது கோவிலில் கருப்பு வேட்டி கருப்பு துண்டு தானம் செய்யுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!