2 வயது மகனை கொன்று போலீஸ்காரரின் மனைவி தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது

மாமியார் கொடுமையால் 2 வயது மகனை கொன்று போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

மகனை கொன்று தற்கொலை

புனே ஹடப்சர் போலீஸ் காலனியில் வசித்து வருபவர் அமித் காம்ப்ளே. இவர் ஹடப்சர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்வி (வயது22). இவர்களுக்கு 2 வயதில் ஷிவான்ஸ் என்ற மகன் இருந்தான்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்ற பின்னர் ஜான்வி திடீரென தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஹடப்சர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய், மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட ஜான்வி தனது கணவருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “அமித்.. நீங்கள் என்னை அதிகம் நேசிக்கிறீர்கள். ஆனால் உங்கள் தாய் சுஜாதாவால் வாழ்க்கையில் வெறுப்படைகிறேன். அவர் என்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார். எனவே வாழப்பிடிக்காமல் இந்த முடிவுக்கு வந்தேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.