வருடம், மாதம், தேதியை தெரிவித்தால் கிழமையை சொல்லி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்திய மாணவன்..!

திருவாடானை ரிக்கோட்டை கிராமத்தில் உள்ள கருணை இல்ல மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் படித்து வருபவர் கண்ணன் (வயது 20). இவர் பிறவியிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர். 4-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இவரிடம் ஆங்கில வருடம் தேதி, மாதத்தை தெரிவித்து கிழமையை கேட்டால் சரியான பதிலை சொல்லி அசத்துகிறார்.

இதேபோல ஆங்கில மாதம், வருடம், தேதியை சொன்னால் அதற்குரிய தமிழ் மாதம் கிழமையை சரியாக சொல்கிறார். இவருக்குள் இப்படி ஒரு தனித்திறமை இருப்பதை கண்டறிந்த சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் 2050-ம் வருடம் வரை வருடம், தேதி, மாதத்தை குறிப்பிட்டு கேட்டுள்ளனர். ஆனால் அந்த மாணவர் சற்றும் சளைக்காமல் கிழமை மற்றும் தமிழ் மாதத்தை சரியாக கூறியுள்ளார்.

இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவரின் பெற்றோர் களை அழைத்து இது பற்றி கேட்டுள்ளனர். அதற்கு சிறுவயது முதலே இவரிடம் இப்படி ஒரு தனி திறமை உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருணை இல்ல பள்ளியின் நிர்வாகி அர்ச்சனா கூறும்போது, கடந்த 7ஆண்டுகளாக இப்பள்ளியில் படித்து வரும் மாணவரிடம் இப்படி ஒரு அபார சக்தி இருப்பதை அவருடைய நடவடிக்கையில் தெரிந்து கொண்டோம். அதனை தொடர்ந்து பல்வேறு வருடங்களில் மாதம், தேதி போன்றவற்றை கூறி கிழமையை கேட்டோம். அவர் சற்றும் சளைக்காமல் பதில் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார் என்று தெரிவித்தார். – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.