20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு- போலி டாக்டர் பற்றி திடுக்கிடும் தகவல்..!


திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் அடுக்குமாடி வீட்டில், பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் கொடூரம் நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் பிரிவின் மாநில கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.

உடனே மருத்துவ கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கமலகண்ணன், நடராஜன், தாமஸ் பிரபாகர் உள்ளிட்டோர் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு, கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோரை பொறி வைத்து பிடித்தனர்.

அவர்களை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதனையடுத்து ஆனந்தியின் செல்போன் மூலம் துப்பு துலக்க முடிவு செய்தனர்.

ஆனந்தியின் செல்போனை ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவிட்ச் ஆப் செய்தனர். மறுநாள் மாலையில் செல்போனை ஆன் செய்து பார்த்த போது கருக்கலைப்பு செய்வதற்காக 25 பேர் அழைத்தது தெரியவந்தது. அதில் 5 பெண்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களை மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

கருக்கலைப்பு செய்வது குற்றம் இதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது என கூறினர். 5 பெண்களுக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது. அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.

ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசிய எண்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கருக்கலைப்புக்காக ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

ஒரு இடத்தில் கருக்கலைப்பு செய்தால் பிடிபடுவோம் என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கு நேரில் சென்று கருக்கலைப்பு செய்யும் மொபைல் சர்வீஸ் நடத்தியதும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஆனந்தி பயன்படுத்தும் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் கருவி, லேப்டாப் வடிவமைப்பில் உள்ளதால் அதனை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வது எளிதாக அமைந்திருக்கிறது. மேலும் ஆனந்திக்கு கருக்கலைப்புக்கான பெண்களை அனுப்பி வைக்கும் நெட்வொர்க் மாநில அளவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலை வட மாவட்டங்களுக்கு கருக்கலைப்பு மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருக்கலைப்புக்காக பெண்களை இங்கு அழைத்து வரும் இடைத்தரகர்களின் பட்டியலை, மருத்துவ கண்காணிப்பு குழுவினர் சேகரித்து வருகின்றனர். இடைத்தரகர்கள் பலரும் விரைவில் சிக்குவர்கள் என தெரிகிறது.

ஆனந்தியின் செல்போனுக்கு ஒரே நாளில் 25 கருக்கலைப்பு போன் கால் வந்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆனந்தி தம்பதியினர் 19 ஆயிரம் சிசு கருக்கலைப்பு செய்திருக்கக் கூடும்.

கருக்கலைப்பு செய்ய வந்த ஒரு செல் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது ஒரு லட்சம் சம்பளம் பெரும் ஆடிட்டர், ஏற்கெனவே 2 பெண் குழந்தை இருப்பதால், மூன்றாவதாக மனைவிக்கு பெண் சிசு கருவில் வளர்வது தெரிந்து கருக்கலைப்புக்கு முயன்றுள்ள கொடுமை தெரியவந்தது.

படித்தவர்களே பெண் சிசுவை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது கொடுமை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஆண்களும், 920 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 850 பெண் குழந்தை பிறப்பு குறைந்துள்ளது.

பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்க இந்திய அளவில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்ட மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து திருவண்ணாமலை கலெக்டர் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் ஆகிய 3 மாநில கலெக்டர்கள் தான் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு மத்திய சுகாதார கண்காணிப்பு குழுவினரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் சோதனைகள் நடத்தினர். அப்போது 7 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைத்தனர்.

எம்.பி.பி.எஸ். முடித்த ஒரு பெண் டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அப்போது நடந்த சோதனையில் போலி பெண் டாக்டர் ஆனந்தி தப்பி விட்டார். தற்போது அவர் பிடிபட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!