ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமை பலவித நலன்களை அருளும்..!


ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும், விந்தையாகவும் இருக்கும். அத்தகைய மஹாபுருஷர் ஒருவருடைய இயல்பை ஆழ்ந்த பக்தி, தீவிர விசுவாசம், உள்ளார்ந்த தூய்மை பொருந்திய ஒரு பக்தரால் மட்டுமே கண்டு கொள்ளக்கூடும்.

அத்தகைய பக்தர் பாபாவுக்கு மிகவும் நெருங்கியவர் ஆகிறார். அவர்களை அவ்வாறு தம்மிடம் வரச்செய்து பின்னர் அவர்களை தம்மை விடாமல் பிடித்துக் கொண்டு அவரிடமிருந்து மேன்மேலும் பலன்கள் பெறச் செய்வதன் பொருட்டு, பாபா தமது அசாதாரண சக்திகளை உபயோகித்து பலவித நலன்களை அருளுகிறார்.


பாபாவுடன் தொடர்பு கொண்டவர்களாலும், அவருடைய மாகாசமாதிக்குப் பின் அவரைப் பற்றி சிந்திப்பவர்களாலும் பெரும்பாலும் பாபா ஒரு ஆசானாகக் கருதப்படவில்லை.

பாபா ஒரு ஆசான் என்பது இப்போது அதிக அளவில் உணரப்படுகிறது. அப்படிக் கூறுவதும் சரியாகாது. அவர் ஒரு ஆசான் மட்டுமே அல்ல. அவர் ஒரு பயிற்சியாளர். அதற்கும் மேலாக, அண்டிவரும் பக்தனின் ஸ்வரூபத்தையே நல்ல முறையில் உருவாக்கும் பொறுப்பை ஏற்பவர்.

அதையும் விட அதிகமாகவும் கூறலாம். அவரிடம் தஞ்சம் புகுந்துவிட்டவர்களின் முன்னேற்றத்துக்கு, ஆன்மீக ரீதியாகவும், தேவையான எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம். அதற்கும் மேலாக, பாபா ஒரு ஆசானோ, பயிற்சியாளரோ மட்டுமல்ல.


அவரே ஒரு பள்ளி ஏன் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புத் திட்டங்கள் அடங்கிய ஒரு பல்கலைக்கழகமே ஆவார். இவ்வாறாக முடிவில்லாது சிந்தித்தும் பார்க்க முடியாத நிலைகளுக்கு கொண்டு செல்லத் தக்கவர்.

ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்ற முறையில் இருந்து, ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் தக்கதான விசேஷ கல்வி முறைகளை அளிப்பவர். பாபா என்ற ஒருவரே ஆசானாகவும், பயிற்சியாளராகவும், போதிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும், வெகு தொலைவிலுள்ள இடங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பவராகவும் இருக்கக்கூடிய விசேஷமான சக்தி இதற்கு முன் காணப்படாதது, கேள்விப்படாது.-source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!