ஓசோனில் உள்ள துளை இப்போது எப்படியிருக்கிறது..? ஐ.நா. தகவல்


காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சு கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து வருகிறது.

மேலும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பேரழிவுகளும் ஏற்படுகின்றன. எனவே கடந்த 1986-ம் ஆண்டு முதல் நச்சு வாயுவை உருவாக்கும் ரசாயன பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் மூலம் ஓசோன் படலம் மேலும் பாதிக்கப்படையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பொதுமக்களும் அதிக அளவில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் பழுதடைந்த ஓட்டை விழுந்த நிலையில் இருக்கும் ஓசோன் படலம் விரைவில் சீரடையும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.சபையின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு 4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

அதில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை மெல்ல மெல்ல மூடி சீரடைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற 2060-ம் ஆண்டில் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்தது போன்ற பழைய நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டிற்குள் ஓசோன் படலத்தின் ஓட்டை 1 முதல் 3 சதவீதம் வரை குறைந்து சீரடைந்துள்ளது.

பூமியின் வடபகுதி மற்றும் மத்திய பகுதியில் 2030-ம் ஆண்டிலும், தென்பகுதியில் 2050-ம் ஆண்டிலும், அண்டார்டிகாவில் 2060-ம் ஆண்டிலும் முற்றிலும் சீரடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்கள் குறிப்பாக குளோரோ, புளோரோ கார்பன்களை தடை செய்ததால் தான் இத்தகைய முன்னேற்றமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!