வீட்டில் சீரடி சாயிபாபாவை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்..?


ஒரு கோயிலில் பாபாவை வழிபடுவதற்கும் வீட்டில் வழிபடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. வீட்டில் வழிபடப்படும் பாபாவின் விக்கிரகத்திற்கு பொதுவாக ‘ பிராண பிரதிஷ்டை ‘ செய்வதில்லை. அவரது உருவப் படங்கள்தான் பொதுவாக வழிபடப்படுகின்றன.

வீட்டில், பாபாவை வழிபடும் முறையை எளிதாக வைத்துக் கொள்வது அவசியம். தேவையான பக்தியை உள்ளுக்குள் உருவாக்காவிட்டால், பெரும்பாலான சடங்குகளும், சாங்கியங்களும் செயற்கையானதும் பயனற்றதும் ஆகும்.

சத்குருவின்மீது அசையாத நம்பிக்கையுடனும் உணர்வுபூர்வமாகவும் ஒரே ஒரு மலரை அர்ப்பணித்தால் கூட போதுமானது. நாம் வீட்டை விட்டு ஏதோ காரணமாக வெகு தூரத்தில் இருந்தாலும், ஓர் இடத்தில் அமர்ந்தவண்ணம் வீட்டில் செய்யும் வழிபாட்டைப் போலவே மானசீகமாக அப்பொழுதும் பாபா வழிபாட்டை நாம் செய்யலாம்.


அதேசமயம் வீட்டில் இவ்வழிபாட்டை வேறு யாரையாவது செய்யச் சொல்லலாம். வெவ்வேறு மதங்கள், சாதிகள், மத நம்பிக்கைகள், சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் பாபா.

சத்குருவினுள் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே மற்ற தெய்வங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை மட்டுமே தெய்வமாக வணங்குவதில் தவறேதுமில்லை. அல்லது மற்ற தெய்வங்களை வணங்குகின்ற முறையிலேயே பாபாவையும் வணங்குவதிலும் தவறு ஏதுமில்லை.


சீக்கிய மதத்தினர் தங்கள் குருக்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்தனர். காரணம் சத்குருவானவர் நிரந்தரமானவர் என்றும் தம்மோடு எப்போதும் இருப்பவர் என்றும் அவர்கள் உளமார நம்புகின்றனர். எனவே பாபாவின்பால் அசைக்கமுடியாத தீவிர நம்பிக்கை கொண்டிருப்பது என்பதே முற்றிலும் தேவையான ஒன்று.

பயங்கள், சந்தேகங்கள், கவலைகள்

பூரண நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பாபாவைச் சரண் புகுவதைத் தவிர ஒருவர் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை. அப்படிச் சரண்புகின், வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், சூழலிலும் அகப்பட்டுத் தவிக்காமல் பத்திரமாகச் செல்ல துணைபுரியவும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் பாபா இருக்கிறார்.


கடவுள் என்றோ ஸத் புருஷர் என்றோ, அல்லது எப்படி வேண்டுமானாலும் அவரைச் சொல்லிக்கொள்ளுங்கள். அவர் அந்தர்யாமியாக உள்ளே விளங்குபவர்; ஆனால் எல்லோரையும் ஆட்கொள்ளக் கூடிய அபார சக்திவாய்ந்த உருவத்துடன் காணப்பட்டார்.

அவர் சன்னிதியில் சந்தேகங்கள், கவலைகள், பயங்கள் ஒன்றுக்கும் இடம் கிடையாது. பாபாவிடம் பூரணமாகத் தஞ்சம் புகுபவர், அதுவே சிறந்ததும், பத்திரமானதுமான ஓரே வழி என்பதை உணர்ந்து விடுகின்றனர். – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.