இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்..!


ஆசிய கோப்பையில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முகமது ஷேசாத் அபாரமான ஆடி 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, 253 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு இறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி நூறு ரன்களை சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 110 ஆக இருக்கும்போது முதல் விக்கெட்டாக அம்பதி ராயுடு 57 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, லோகேஷ் ராகுல் 60 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் ஒருபுறம் நிதானமாக ஆடினார். மறுபுறம் இறங்கிய கேப்டன் தோனி 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 8 ரன்னிலும், கேதார் ஜாதவ் 19 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னிலும் அவுட்டாகினர்.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனாலும், அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா போராடி அணியை வெற்றி பெற பாடுபட்டார்.

ஆனால், இறுதி ஓவரை வீசிய ரஷித் கான் ஜடேஜாவை அவுட்டாக்கி இந்தியாவின் வெற்றியை தடுத்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இறுதியில், இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, போட்டி சமனானது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமான பீல்டிங், துல்லியமான பந்து வீச்சு என அசத்தினர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் மொகமது நபி. அப்தாப் ஆலம், ரஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டும், ஜாவித் அஹமதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவின் 3 வீரர்களை ரன் அவுட்டாக்கினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!