வீட்டின் மொட்டை மாடியில் பிரமாண்டமாக எழுதப்பட்ட ‘தேங்க்ஸ்’ வாக்கியம் – கேரளாவில் நெகிழ்ச்சி..!


வெள்ளத்திலிருந்து மீட்டெடுத்த வீரர்களுக்கு கேரளாவில் வீட்டின் மொட்டை மாடியில் ’தேங்க்ஸ்’ என பிரமாண்ட வாக்கியம் எழுதப்பட்டிருப்பது காண்போரை நெகிழ வைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் வீடு மற்றும் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் மோசமான வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்தியாவின் பல படைப்பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீரர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிதும் உதவி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு ’தேங்க்ஸ்’ என வீட்டின் மொட்டை மாடியில் எழுதப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கடந்த 17-ந் தேதி கேரள மாநிலத்தில் கொச்சினில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டின் மொட்டை மாடியில் பரிதவித்த இரண்டு பெண்களை இந்திய கடற்படை வீரரான விஜய் வர்மா பாதுகாப்பாக மீட்டுள்ளார். அந்த வீரருக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் அப்பெண்கள் தன் வீட்டின் மொட்டை மாடியில் ’தேங்க்ஸ்’ என பெயிண்டால் பிரம்மாண்டமான முறையில் எழுதியுள்ளனர். இப்புகைப்படத்தை இந்திய கடற்படை தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் இப்புகைப்படமானது காண்போரை நெகிழ வைத்துள்ளது.

இதனிடையே ஆலுவா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில், தனது மகிழ்ச்சி கலந்த நன்றியை இந்திய கடற்படையிடம் மீட்கப்பட்ட பெண் தெரிவித்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!