திமுக தலைவரை அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அண்ணா சமாதி அமைந்துள்ள மெரீனா கடற்கரைக்கு வந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவரது பூத உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக கோரிக்கை விடுத்தது.
ஆனால், தமிழக அரசு மறுத்துவிடவே, நீதிமன்றத்தின் கதவை தட்டியது திமுக.
இதனை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதையடுத்து, கருணாநிதியை அண்ணா சமாதி அருகே எந்த இடத்தில் புதைக்கலாம் என திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பள்ளம் தோண்டுவதற்காக 2 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அங்கு காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.-Source: tamil.eenaduindia
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!