கருத்தரித்த பெண்களையும் தாக்கும் என்டோமெட்ரியோசிஸ்… குணப்படுத்துவது எப்படி..?


இக்காலத்தில் பல இளம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக என்டோமெட்ரியோசிஸ் காணப்படுகின்றது. இதனால் குழந்தைப் பெறுவது என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனினும் இதற்கு தகுந்த சிகிச்சைகளை செய்வதன் மூலம் தீர்வு காணலாம்.

என்டோமெட்ரியம் என அழைக்கப்படும் கருப்பைச் சுவர் திசுவானது கருப்பைச் சுவரை விட்டு கருப்பைக் குழியில் வளர்வதே என்டோமெட்ரியோசிஸ் என அழைக்கப்படும். சில சமயங்களில் இந்த திசு கருப்பையின் வெளிப்புறம் மற்றும் பலோப்பியன் குழாய் வரை வளர்ச்சியடையலாம்.

கருப்பைக்கு கரு முட்டையை கொண்டு செல்ல துணை புரியும் பலோப்பியன் குழாயில் திசு வளர்ச்சி ஏற்படுமாயின் ஒரு பெண் கருவுறுதல் தடுக்கப்படும். எனினும் ஒரு பெண்ணின் வயது, சுகாதார நிலைமைகள் மற்றும் திசு வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எந்தளவு என்பதைப் பொருத்து ஒரு பெண் கருவைச் சுமப்பது நிர்ணயிக்கப்படும்.

ஒரு சில பெண்களுக்கு இந்த பிரச்சினை கருத்தரித்தவுடன் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு கர்ப்பகாலத்திலும் இப் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலைமையால் ஏற்படும் பாதிப்புக்கள்

01. கருக்கலைதல்
இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். கருச்சிதைவு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை வைத்தியரை அணுகி தெரிந்து கொள்ளுதல் அவசியம்.


02. குறைபிரசவம் ஏற்படுதல்
என்டோமெட்ரியோசிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் கருவுறும் பட்சத்தில் குறை மாதத்திலேயே பிரசவம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

03. பிளெசென்டாப்ரிவியா
குழந்தை தாயின் வயிற்றில் வளரும் போது அதற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கேற்றவாறு நஞ்சுக் கொடி என அழைக்கப்படும் தட்டை வடிவிலான திசு உருவாகும். பொதுவாக இது கருப்பையின் மேற்புறத்தில் அல்லது பக்கங்களில் உருவாகும். ஆனால் இரு கருப்பை வாயிலில் உருவாகுமாயின் அது தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமையும். என்டோமெட்ரியோசிஸினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் இந்த நிலைமையினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

இதற்கான தீர்வு?
கருவுற்ற பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பின் சத்திர சிகிச்சை மற்றும் ஹோர்மோன் சிகிச்சை என்பன தகுந்த பலனை தராது. ஆகவேதத்தமது நிலைமையை கருத்திற் கொண்டு என்ன சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பதை வைத்தியரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும்.

இருப்பினும் சுடுநீர் குளியல், பைபர் சத்து உள்ள உணவுப் பொருட்களை அதிகளவில் உட்கொள்ளல், நடைபயிற்சி, பிரசவத்திற்கு முந்தைய யோகா பயிற்சி என்பவற்றை மேற்கொள்வதன் மூலம் என்டோமெட்ரியோசிஸினால் ஏற்படும் அசௌகரியத்தை ஓரளவு குறைக்கலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!