இவர் உயிருடன் எரிக்கப்பட்டாரா..? தியானம் செய்தவரை பிணம் என்று தீயில் தள்ளிய கொடூரம்..!


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியவர் தாயுமானவர். கி.பி. 18-ஆம் நூற்றாண்டில், திருமறைக்காடு என்ற வேதாரண்யத்தில் இருந்த கேடிலியப்ப பிள்ளை என்பவர், திருச்சியை ஆண்ட மன்னரிடத்தில் அமைச்சராகப் பணி புரிந்தார்.

அவர் இறந்து விட்டதால், அவர் வகித்த பதவியை அவரது மகனாகிய, தாயுமானவருக்கே அளித்தார், மன்னர். தாயுமானவருக்குத் திருமணமும் ஆயிற்று.

சிறு வயது முதலே ஆன்மீகத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்த தாயுமானவர், மௌன குரு என்பவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் சொன்ன மார்க்கத்தில் பக்தியைக் கடைபிடித்தார்.

ஒரு முறை மன்னர் இவருக்குப் பரிசாக அளித்த உயர்ரக சால்வையைத் தான் அணியாமல், சாலையில் திரிந்த பிச்சைக்காரிக்கு கொடுத்து விட்டார்.

இதனை அறிந்த மன்னர், தாயுமனவரிடம் இது பற்றி விசாரித்தார். தாயுமானவர், அதற்கு, அது பிச்சைக்காரி அல்ல. அந்த ரூபத்தில் இருந்த, அகிலாண்டேஸ்வரி குளிரில் நடுங்கினாள்.

அதனால், அந்த சால்வையை அவளுக்குத் தந்தேன் என்றவர்,“எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின்தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே” – என்று பாடினார்.

ஒரு நாள் திடீரென, அவருக்குள் ஒரு ஞானோதயம் தோன்ற, இல்லறத்தைத் துறந்;து, இறையடியை நாடி, ராமேஸ்வரம் வந்தார். அப்போது, அந்த ஊரில் மழை இல்லாமல் போனதால், மக்கள் பஞ்சத்தில் வாடினர்.


அதைக் கண்டு மனம் வேதனை அடைந்த தாயுமானவர், “வானங்காண் பெய்ம்மின் மழை” என்ற வெண்பாவைப் பாடினார். உடனே மழை பெய்யத் துவங்கியது. மக்கள் அவரை மகானாகப் போற்றி வழிபட்டனர்.

பின்னர் அவர், தனியாக இருந்து தவம் புரிய எண்ணி, ராமநாதபுரத்திற்கு வந்தார்.அங்கே லெட்சுமிபுரம் எனும் பகுதியில், உள்ள காட்டூரணி என்ற பகுதிக்கு வந்தார். அந்த ஊரணியின் கரையில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது.

அந்தப் புளிய மரத்தின் கீழ்ப் பகுதியில் பெரிய பொந்து இருந்திருக்கிறது. அதற்குள் அமர்ந்து தியானம் செய்யத் துவங்கி விட்டார். பின் அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த இடத்தில் இருந்து தான், பராபரக்கண்ணி, பைங்கிளிக்கண்ணி, மலைவளர்க்காதலி, சுகவாரி, கருணாகரக் கடவுள், மௌனகுரு வணக்கம், பரமசிவ வணக்கம் உள்ளிட்ட எண்ணற்ற பாக்களை இயற்றினார்.

ஒரு சமயம், இவர் ஆழ்ந்த தியான நிலையில் மூச்சை அடக்கி நெடு நேரம் இருந்திருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்த அரண்மனைக் காவலர்கள், தாயுமானவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு, அவர் இறந்து விட்டதாக எண்ணி, மன்னருக்குத் தகவல் தந்தனர்.


மன்னரும், இறந்த உடலை என்ன செய்வது? எரித்து விடுங்கள் என்று கட்டளை இட்டாராம். அதனால், தாயுமானவர் உடலை, அரண்மனைக் காவலர்கள், பிணம் என்று எண்ணி எரிக்கத் தொடங்கி விட்டார்களாம்.

தீயின் உஷ்ணம் தன் உடலைத் தாக்க, விழித்தெழுந்த தாயுமானவர், கோபமடைந்து, தன்னை எரிக்கச் சொன்ன மன்னனுக்கு சாபமிட்டாராம்.

பின் எரிந்த உடலுடன் ஜீவ சமாதி அடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள்.தற்போது, ராமநாதபுரம் காட்டூரணி என்ற பகுதியின் கரையில், தாயுமானவர் தவம் இருந்த பகுதியைச் சுற்றி காம்பவுண்டு சுவருடன் கூடிய ஆலயம் அமைத்திருக்கிறார்கள்.

அவர் தவம் செய்த, புளியமரத்தின் கீழே அவரது சிலையையும் வைத்திருக்கிறார்கள். தாயுமானவர் தவம் செய்த போது இருந்த பொந்து காலப் போக்கில் மண்ணிற்குள் புதைந்து விட்டது. இந்த இடத்தில் அவரைப் போற்றித் தினமும் பாக்களைப் பாடி வருகிறார்கள், தாயுமானவரின் பக்தர்கள்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!