போலீஸ் பாதுகாப்போடு நடந்த பிரபல ரவுடியின் திருமணம் – சென்னையில் பரபரப்பு..!


சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் சிவக்குமார் (வயது40). இவர் மீது மயிலாப்பூரில் நடந்த இரட்டை கொலை வழக்கு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகியிருந்தது.

சமீபத்தில் ரவுடி பினு சென்னை மாங்காடு பகுதியில் அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அந்த பிறந்தநாள் விழாவில் சென்னை முழுவதும் உள்ள ரவுடிகள் கலந்து கொண்டனர்.

ரவுடி பினுவின் பிறந்தநாள் விழா ரகசியமாக நடந்தது. ஆனால், ரவுடி சிவக்குமார் தனது திருமண விழாவை அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரமுகர்கள், தனது சக நண்பர்கள் முன்னிலையில் வெளிப்படையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை சாந்தோமில் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்.

சாந்தோமில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமாக பந்தல்போட்டு சிவக்குமார் தனது திருமண நிகழ்ச்சியை நடத்தினார். திருமண விழாவிற்கு மயிலாப்பூர் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருமணம் முடிந்த உடன் விருந்து நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ரவுடி சிவகுமாருக்கு சென்னை எம்.எல்.ஏ. உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபல சினிமா இயக்குனர் உள்ளிட்ட சினிமா பிரபலங் கள் சிவகுமாரின் சக ரவுடி நண்பர்கள் 100-க்கும் மேற்பட்ட கார்களில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

சிவக்குமார் திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்? என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

ரவுடி சிவக்குமார் ஒரு காலத்தில் பயங்கர ரவுடியாகத்தான் செயல்பட்டார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவில் அவர் குற்றச்செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை. மயிலாப்பூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் அவர் விடுதலையாகி வந்துவிட்டார். மற்ற வழக்குகளை அவர் கோர்ட்டில் சந்தித்து வருகிறார்.

அவரை அவ்வப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தனிப்பட்ட முறையில், அவர் தனது திருமண விழாவை நடத்தியுள்ளார். அவரது திருமண விழாவில் அவரது எதிரிகள் யாராவது புகுந்து தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்காகவும், திருமண விழாவிற்கு யார்-யார் வருகிறார்கள்? என்பதை கண்காணிப்பதற்காகவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரவுடி சிவக்குமார் போலீஸ் பாதுகாப்போடு தனது திருமண விழாவை நடத்தியது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!