விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை, தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி, சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
விஜயகலா மகேஸ்வரனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூட்டு எதிரணியினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும், விஜயகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே, விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கும்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் முடியும் வரை, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறும் சிறிலங்கா பிரதமர் கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.source-puthinappalakai
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!