500 கிலோ மீட்டர் தூரத்தை 6¾ மணி நேரத்தில் கடந்து சென்ற டிரைவர்… எதற்கு தெரியுமா?


கேரளாவில் குழந்தையின் உயிரை காக்க 500 கிலோ மீட்டர் தூரத்தை 6¾ மணி நேரத்தில் டிரைவர் கடந்து சென்றதால், அக்குழந்தைக்கு டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சிராஜ் – ஆயிஷா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் இதய கோளாறு காரணமாக மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அந்த குழந்தையை கண்ணூர் பரியாரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


அந்த குழந்தைக்கு நவீன சிகிச்சை அளித்தால்தான் அதன் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு நவீன சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டர்கள் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரை திருநாள் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து குழந்தையை அந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் இடையே உள்ள 500 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 13 மணி நேரம் ஆகும்.

ஆனால் 10 மணி நேரத்திற்குள் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் தமீன் என்பவரை அழைத்து நிலவரத்தை டாக்டர்கள் தெரிவித்தனர்.


அதன் பிறகு கண்ணூர் உள்பட திருவனந்தபுரம் வரை உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இந்த தகவல் கொடுக்கப்பட்டது. பேஸ்-புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமும் இந்த உயிர் காக்கும் நடவடிக்கை பற்றி தகவல் பொதுமக்களுக்கு பரப்பப்பட்டது.

இதைதொடர்ந்து போக்குவரத்து இடையூறு இன்றி சீரமைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் குழந்தையுடன் புறப்பட்டது. இரவு 8.30 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 6¾ மணி நேர பயணத்திற்கு பிறகு அதிகாலை 3.20 மணிக்கு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியை சென்றடைந்தது.

அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர் தமீனின் இந்த சிறந்த சேவைக்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!